பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றும் அஸிமை கமல்ஹாசன் கடுமையாக சாடும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். 


இதில் ஜி.பி.முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, முதல் எவிக்‌ஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2வது எவிக்‌ஷனாக  சக பெண் போட்டியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட அசல் கோலார் வெளியேறியுள்ளார். இதனிடையே நேற்றைய எபிசோடில் கமல் கடந்த வாரம் முழுவதும் விளையாடப்பட்ட, நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் பற்றி பேசினார். 






இதில் ஷெரினா கீழே விழ தனலட்சுமி தான் காரணம் என அஸிம் சொன்னார். இதை சக போட்டியாளர்களில் சிலரும் நம்பி விட்டனர். ஆனால் தனமோ தான் உறுதியாக தள்ளவில்லை எனவும், கமல் நிரூபித்தால் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க தயார் என சொன்னார். நீண்ட சீசனுக்கு பிறகு குறும்படம் போட்டு கமல் தனலட்சுமி மீதான குற்றச்சாட்டை இல்லை என நிரூபித்தார். இதில் அஸிமின் எதிர்பாராத உடல் பலத்தால் தள்ளியதால் தான் இருவரும் கீழே விழுந்ததாகவும் தெரிவித்தார். 


மேலும் சக போட்டியாளர்களை கிண்டல் செய்தது, ஆக்ரோஷத்துடன் கத்தியது என அஸிமின் நடவடிக்கைகளை கமல் கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் ஆரம்பத்தில்  நான் விளையாட விரும்பலை என சொன்ன ஆயிஷா ஒரு கட்டத்தில் ரச்சிதாவின் பொம்மையை அமைதியாக வைத்துக் கொண்டு நின்றதால் ரச்சிதா வெளியேற்றப்பட்டார். 


இதனை சுட்டிக்காட்டி கமல் கேட்க, அதற்கு ஆயிஷா எனக்கு சத்தியமா தெரியாது. அந்த பொம்மையை தடுக்குறதுக்கு இவங்களுக்கு பிளான் இருந்துச்சுன்னு என சொல்கிறார். அதற்கு ரச்சிதா விளையாடணும்ன்னு ஆசைப்படுற என் பொம்மை உள்ளே வந்துருக்கலாமேன்னு தோணுச்சு என சொல்கிறார். உடனே கமல் ஆயிஷாவிடம், விளையாடாத விரும்பாத நீங்கள் அவர் சொன்னாருன்னு ரச்சிதா பொம்மையை எடுத்துட்டு போய்ட்டீங்க என கேட்க, முதலில் யாரும் எடுக்க சொல்லல என கூறும் ஆயிஷா பின் அஸிம் அண்ணா தான் அதை எடுத்துட்டு போகச் சொன்னாரு என உண்மையை போட்டுடைக்கிறார். 


அஸிமிடம் திட்டத்தில் நீங்களும் பங்கெடுத்து கொண்டீர்கள் என கமல் கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே நேற்றே கமலிடம் கடும் விமர்சனத்தை சந்தித்த அஸிம், இன்றும் வாங்கிக் கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.