பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் திருநங்கை ஷிவின் கணேசன் பங்கேற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ்  என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். 


முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர். இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார். 






தொடர்ந்து நிகழ்ச்சியின் 3வது போட்டியாளராக சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியாக பணிபுரியும் திருநங்கை ஷிவின் கணேசன் கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வரலாற்றில் கடந்த சீசனில் முதல் முறையாக திருநங்கை நமீதா மாரிமுத்து பங்கேற்றிருந்தார். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் சப்போர்ட் இருந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார். இந்த நிலையில் இந்த சீசனில் திருநங்கை ஷிவின் கணேசன் கலந்து கொண்டுள்ளார்.