பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பாவ்னி ரெட்டி தனது உடல்நிலை மோசமானதால் கதறி அழுததாகவும், அறுவை சிகிச்சை செய்துள்ளதகவும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். விரைவில் அவர் குணமடைவார் என நண்பர்களும், அவரது ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். 


பிக்பாஸ் பாவ்னி:


விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி ஆகிய சீரியல்கள் மூலம் பிரபலமான பாவ்னி ரெட்டி, பிக்பாஸ்-5 சீசனில் பங்கேற்றார். அதில் தனக்கு சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள், திருமணம், கணவரின் இறப்பு என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் இணைந்த அமீருடன் பாவ்னிக்கு ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.


பின்னர், இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நடன ரியாலிட்டி ஷோ-வின் 2வது சீசனில் பங்கேற்றனர். போட்டியை விட்டு வெளிவே வந்த பிறகும் இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வருவது, சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது என பிசியாக இருந்தனர். அமீரின் காதலை பாவ்னி ஏற்ற நிலையில், இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. 


மருத்துவமனையில் பாவ்னி:


இந்த நிலையில், பாவ்னி தனது உடல்நிலை குறித்து பேசி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். இஸ்டகிராமில் மருத்துவமனையில் சிகிச்சையில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பாவ்னி, “ கடந்த 15 நாட்களாக தனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததாகவும், கழுத்துக்கு பின்னால் இருந்த சிறிய வலி நாளுக்கு நாள் அதிகரித்து தனக்கு வேதனையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 


வலியால் கதறி துடித்தது மட்டும் இல்லாமல், இரவு நேரங்கள் தூங்க முடியாமலும், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் வேதனையை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அதிகமான வலி இருந்தாலும், நடிப்பை பாதியில் நிறுத்திட முடியவில்லை என்ற பாவ்னி, வலியுடன் ஐதரபாத் சென்று நடித்து கொடுத்ததாகவும் பகிர்ந்துள்ளார். 


அறுவை சிகிச்சை:


ஷூட்டிங் செல்வதற்கு முன்பு தினமும் பிசியோதெரபி செய்து கொண்டு வலியுடன் நடித்ததாக பகிர்ந்த பாவ்னி,  தனது வலது கை உடைந்தது போல் பயங்கரமான வலியை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார். வலியை தாங்க முடியாமல் சுவரில் குத்தி அழுததாகவும், வேறு வழியில்லாமல் எண்டோஸ்கோபிக் டிஸ்கோக்டோமி அறுவை சிகிச்சை செய்ததாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.


அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தனது கடினமான சூழலில் தனதுக்கு ஆதரவாக இருந்த அமீர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மிகுந்த நன்றி என தனது பதிவில் உருக்கமாக பாவ்னி தெரிவித்துள்ளார்.