நடிகர் , பாடலாசிரியர் , அரசியல்வாதி என அறியப்படுபவர்  கவிஞர் சினேகன். ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என குறிப்பிட்ட  சில படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சினேகன்.  இந்நிலையில் சினேகன் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்திருந்தார். அதில்  “கவிஞர் சினேகன் அவர்கள் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என் அவர்கள்மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன்  இல்லறமேற்கும் அவருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்.” என குறிப்பிட்டுள்ளார்.


 






சினேகனை மணக்க உள்ள கன்னிகா சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் , நடிகையாகவும் இருந்தவர். கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில்  ‘கல்யாண வீடு’  என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தவிர சிலம்பத்தை முறையாக கற்று தேர்ந்தவர். தன்னை ஒரு எழுத்தாளராகவும் கன்னிகா அறிமுகப்படுத்திக்கொள்கிறார். வருகிற 29 ஆம் தேதி சினேகன் - கன்னிகா திருமணம் , கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் , கமல் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சினேகன் அதிலும் வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமாவில்  இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் இன்றளவு ஹிட் லிஸ்டில் உள்ளன. 





கடந்த 1990 ஆம் ஆண்டு வைரமுத்து சமூக இலக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் செழியன் மூலம் வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்து. சினிமா உலகில் காலடி வைத்தவர் சினேகன். முன்னதாக கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்தாண்டு காலம் உதவியாளராக பணிபுரிந்தார்.அதன் பிறகு பல வருட காத்திருப்பிற்கு பின்னர் ‘புத்தம் புது பூவே’ என்ற திரைப்படத்தில் பாடலாசிரியராகும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்தது.