உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் முடிவடைந்த நிலையில், 5 வது சீசன் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிக்பாஸ் சீசன் 5(Bigg Boss 5 Tamil) இன் புரமோ ஷூட் தொடங்கியதாகவும் அதில் தொகுப்பாளரும் , நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசனை ஒப்பிடுகையில் இந்த சீசனில் நிறைய விதிமுறை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்களாம். அதாவது இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக திருநங்கைகள் இருவர் பங்கேற்க உள்ளனராம். அதில் ஒருவர் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா என கூறப்படுகிறது. மற்றொருவர் மிஸ் திருநங்கை பட்டம் வெற்ற நமீதா என சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டிற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள சூழலில் அது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தற்போது போட்டியாளர்களை (Bigg Boss 5 Tamil Contestants) தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர். பிக்பாஸ் போட்டியில்  பங்கேற்க விருப்பம் உள்ளதா என கிட்டத்தட்ட 30 பேரிடம் பேச்சுசுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை விஜய் டிவின் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் பங்கேற்ற நிலையில் இம்முறை விஜய் டிவியில் இருந்து சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கின்றனர். அதுவும் குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் என கூறப்படுகின்றது. குறிப்பாக கனி, சுனிதா, தர்ஷா உள்ளிட்டவர்கள் பட்டியலில் உள்ளார்களாம். இதில் சுனிதா இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல மைனாவிடமும் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது. கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் சமூக வலைதளங்கள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. எனவே சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களும் பிக்பாஸ் சீசன் 5 இல் இணைய உள்ளார்களாம். குறிப்பாக பலருக்கும் ஃபேவரெட்டாக இருக்கும் ஜி.பி.முத்துவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.




முந்தைய சீசனை ஒப்பிடுகையில் இம்முறை நிறைய விதிமுறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாம். அது நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்புடன் நகர்த்தும் வகையில் அமையுமாம் . கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டியாளர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே பிக்பாஸ் வீட்டின் களம் காண்பார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி சினிமாவில் சாதிக்க விரும்பும் பலருக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே சமயம் ஒருவரின் சுயத்தை உலகறிய செய்யும் ரியல்டைம் கேம் சேஞ்சராகும். அவர் அவரின் குணங்களுக்கு ஏற்ப அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கலாம் அல்லது ஏற்கனவே இருந்த வாய்ப்புகளும்  கூட பறிபோகலாம்.