பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகி நிஷா உபாத்யாய் பீகார் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாடகி நிஷா உபாத்யாய் பீகார் மாவட்டத்தில் உள்ள சரண் என்ற இடத்தில் கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியானது சேடுவார் கிராமத்தில் வசிக்கும் வீரேந்திர சிங்கால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பாடகி நிஷா உபாத்யாய் பாடி கொண்டிருந்தபோது, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். அது எதிர்பாராதவிதமாக பாடகி நிஷாவின் இடது தொடையை தாக்கியது. காயம் பட்ட இடத்தை தேய்த்து கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். 






இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. படுகாயம் அடைந்த பாடகி நிஷாவை அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தனர். 


சமீபத்திய தகவலின்படி, நிஷாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் யார், நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு எப்படி நடந்தது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்