பாக்கியலட்சுமி சீரியலில் நீண்ட நாட்களுக்குப் பின் பாக்யா குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


ஜெனிக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி 


தனது அறையில் செழியன் தூங்கி கொண்டிருக்க ஜெனி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு எழுகிறார். என்ன சாப்பிட்ட, எதுவும் உடம்பு சரியில்லையா என அவர் கேட்க, ஜெனியும் தெரியலை என சொல்லிவிட்டு பின் ஈஸ்வரியிடமும், பாக்யாவிடமும் தனது 2,3 நாட்களாக இந்த பிரச்சனை இருப்பதாக கூறுகிறார். உடனே எல்லாம் நல்லா செய்தியாக தான் இருக்கும் என எண்ணி டாக்டரிடம் கூப்பிட்டு போக சொல்கிறார் ஈஸ்வரி. 


தொடர்ந்து வீட்டில் ராமமூர்த்தி, ஈஸ்வரி, எழில், செல்வி ஆகியோர் ஜெனி, பாக்யா, செழியன் ஆகியோர் டாக்டரிடம் போன விஷயம் என்ன ஆனதோ என பதட்டத்துடன்  காத்திருக்க பாக்யா வந்து ஜெனி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷமான செய்தி சொல்கிறார். மொத்த வீடும் ஹேப்பியாக மாறுகிறது. பல கஷ்டங்களுக்குப் பின் குடும்பத்துக்கு உன்னோட பிள்ளை மூலமாக நல்ல செய்தி வந்ததாக ஜெனியிடம் ஈஸ்வரி தெரிவிக்கிறார். உடனே பாக்யா கேசரி செய்யப் போக பாசுந்தி வாங்கி கொடுங்க என செல்வி கேட்க, செழியன் வாங்க செல்கிறார். 


”தாத்தா” கோபி 


கோபியை வெறுப்பேற்ற நினைக்கும் ராமமூர்த்தி ஸ்வீட் பாக்ஸோடு நேராக அவர் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ராதிகா கோபியிடம் மாவு அரைக்கிறது எல்லாம் கஷ்டம்.போய் கடையில மாவு வாங்கிட்டு வாங்க என  பேசிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே வந்து நான் கொள்ளுத்தாத்தாவாக போறேன். என் பேத்தி ஜெனி அம்மாவாக போறான். செழியன் அப்பாவாக போறான் என சொல்லிவிட்டு நீ தாத்தாவாக போற கிண்டல் செய்கிறார். இதைக் கேட்டு ராதிகா டென்ஷனாகிறார். என்னதான் நீ புதுமாப்பிள்ளைன்னு சொன்னாலும் நாளைக்கு நீ வெளியே போறப்ப எல்லாரும் கோபி நீங்க தாத்தாவாக போறீங்களாமே என கேட்பார்கள் என கொளுத்திப் போட கோபி என்னடா இது சோதனை என முழிக்கிறார். 


செழியனை சந்திக்கும் கோபி 


அடுத்ததாக தயாரிப்பாளர் அலுவலகத்தில் அம்ரிதாவிடம் வர்ஷினி எழிலுடனான காதல் கதையை கடுப்புடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்க கல்யாணம் பண்ணுவீங்களா என உள்நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்வியைக் கண்டு அம்ரிதா குழப்பமடைகிறார். அப்போது அங்கு வரும் எழில் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து விட்டு விஷயத்தை சொல்ல அம்ரிதா ஜெனியிடம் இப்பவே பேசுகிறேன் என சொல்லி போனில் அவரை அழைக்கிறார். 


தொடர்ந்து செழியனை சந்திக்கும் கோபி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஜெனிக்கு இந்த நேரத்தில் தேவையானதை செய்ய வேண்டும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களோடு இருக்க நினைக்கிறேன் என தனது பரிதவிப்பையும் சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.