Behind The Song வரிசையில் அஜித் நடித்த பரமசிவன் படத்தில் இடம் பெற்ற “ஒரு கிளி காதலில்” பாடல் உருவான கதையை பற்றி காணலாம். 


பி. வாசு இயக்கத்தில் அஜித் குமார், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்த படம் “பரமசிவன்”. வித்யாசாகர் இசையமைத்த இப்படம் 2006 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசாகி படுதோல்வியடைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வைரமுத்து, யுகபாரதி, நா.முத்துக்குமார், கிருத்திகா, பா.விஜய் ஆகியோர் எழுதியிருந்தனர். இதில் “ஒரு கிளி காதலில்” பாடலை யுகபாரதி எழுதியிருந்தார். 



ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் யுகபாரதி, “அஜித் பரமசிவன் என்ற ஒரு படத்தில் நடித்தார். இன்றைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த படத்தில் ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில் என்ற காதல் பாட்டை நான் எழுதினேன். அஜித் அந்த காலத்தில் கொஞ்சம் குண்டாக இருந்தார். அதன்பிறகு பரமசிவன் படம் நடிக்கும்போது எடையை குறைத்து ஒல்லியாக இருந்தார். இதனை பரமசிவன் படத்தின் இயக்குநரான பி.வாசு என்னிடம் குறிப்பிட்டு பாடல் எழுத வேண்டும் என சொன்னார். அஜித் உடம்பு இளைத்திருக்கிறார். அதனைக் குறிப்பிட்டு பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். நான் எப்படி அதை எழுத முடியும்?. சங்க இலக்கியங்களில் ஒரு பெண் உடல் இளைத்தால் பசலை என சொல்வார்கள். ஆனால் ஆண் இளைத்தால் பலவீனம் என்று அர்த்தம். அப்படியிருக்கையில் எப்படி நான் எழுத முடியும் என கேட்டேன். நான் அஜித்திடம் முன்கூட்டியே நீங்க எழுத போறீங்கன்னு சொல்லிட்டேன். நானே இன்னும் முடிவு பண்ணவில்லையே என சொல்ல, இல்ல நீங்க எழுதுவீங்கன்னு எனக்கு தெரியும் என பி.வாசு கூறினார். கடைசியில் அந்த உடல் எடை குறைந்ததை குறிப்பிட்டு பாடல் வரிகள் யார் மீது ஆசை
கூடி போக தேகம் இளைத்தாயோ என எழுதினேன்.