தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வரராவ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரை அவமானப்படுத்துவிதமாக நடிகர் பாலகிருஷ்ணா பேசியது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


டோலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகர்கள்


நம் ஊரில் எம்ஜிஆர், சிவாஜி போன்று 60கள், 70களில் டோலிவுட்டில் என்.டி.ஆர், ஏ.என்.ஆர் ஆகிய இருவரும் கோலோச்சி பெரும் நடிகர்களாகத் திகழ்ந்து வந்தனர்.


எம்.ஜி.ஆர் போல் சினிமாவில் தொடங்கி அரசியலில் பயணித்து பெரும் ஆளுமையாக என்.டி.ஆர் திகழ்ந்த நிலையில்,  நடிகர் நாகார்ஜூனின் தந்தையும் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர்களுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் இன்றளவும் டோலிவுட்டின் கடைக்கோடி சினிமா ஊழியர் வரை ரசிக்கப்பட்டு வருகிறார். 




அதேபோல் அன்றைய காலக்கட்டத்தில் கதாநாயகன் முதல் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் வரை நடித்து தமிழ், தெலுங்கு இரண்டு துறைகளிலும் தலைசிறந்த நடிகராகத் திகழ்ந்தவர் எஸ். வி. ரங்காராவ்.


தகாத வார்த்தைகளில் பேசிய பாலகிருஷ்ணா


இந்நிலையில், முன்னதாக தன் தந்தை என்.டி.ராமராவின் காலத்தைச் சேர்ந்த சக நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ், ரங்கா ராவ் ஆகிய இருவரையும் அவமானப்படுத்தும் வகையில் நடிகர் பாலகிருஷ்ணா பேசியது டோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம், சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், இப்படத்தின் சக்சஸ் பார்ட்டி முன்னதாக நடைபெற்றது.


அப்போது பேசிய பாலகிருஷ்ணா, ”என் தந்தை என்.டி.ஆருடன் சில சக நடிகர்கள் இருந்தனர். ஆ ரங்காராவ் (அந்த ரங்காராவ்) அக்கினேனி, தொக்கினேனி...” எனத் தொடங்கி கேலி செய்யும் வகையிலும், அவமானப்படுத்தும் முறையிலும் பேசியுள்ளார்.


வைரலான வீடியோ






பாலகிருஷ்ணா பேசும்போது உடன் இருப்பவர்களும் சேர்ந்து சிரித்த நிலையில், இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.


இந்நிலையில், தங்கள் தாத்தாவான அக்கினேனி நாகேஸ்வர ராவை அவமானப்படுத்தும் விதமாகப் பேசிய பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி தந்து, நாகார்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யா, அகில் இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது கவனமீர்த்துள்ளது.


நாக சைதன்யா, அகில் பதிலடி 


”நந்தமூரி தாரக ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.வி.ரங்கா ராவ் இவர்கள் அனைவரும் தங்கள் படைப்பாற்றலால் பங்களித்து தெலுங்கு சினிமாவின் பெருமையாகவும் தூண்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அவர்களை அவமானப்படுத்துவது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதற்கு சமம்” எனப் பதிவிட்டுள்ளனர்.






சினிமாவில் ட்ரெய்னை பின்னோக்கி ஓட வைப்பது, கோழிகளைக் கொண்டு எதிராளிகளை கொலை செய்வது என சீரியஸாக நடிப்பது முதல் ஆஃப்ஸ்க்ரீனில் உளறிக்கொட்டுவது வரை  வாடிக்கையாகக் கொண்டுள்ள பாலகிருஷ்ணா,  சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.


குடித்துவிட்டு உளறினாரா?




இந்நிலையில், வீர சிம்ஹா ரெட்டி பட வெற்றி விழாவில் பாலகிருஷ்ணா குடிபோதையில் உளறியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக சக்சஸ் மீட்டில் பட ஹீரோயின் ஹனி ரோஸ் உடன் கைகோர்த்தபடி பாலகிருஷ்ணா ஷாம்பெய்ன் அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.


இந்நிலையில் 61 வயது பாலகிருஷ்ணா, இப்படி வாயைக் கொடுத்து அக்கினேனி குடும்பத்தின் இளம் தலைமுறை நடிகர்களிடம் வாங்கிக் கட்டியது டோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.