சிவகார்த்திகேயன் வித் ஏலியன்


சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் அயலான் (Ayalaan). வேற்றுகிரக வாசி - சைன்ஸ் ஃபிக்சன் கதை என சுவாரஸ்யமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 


இந்தப் படத்தில் உள்ள ஏலியன் கதாபாத்திரம் குறித்த போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இப்பாத்திரம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது.


குரல் தந்த சித்தார்த்


அதன்படி, ஏலியன் கதாபாத்திரத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டு சித்தார்த் - ஸ்ருதி நடித்த ‘ஓ மை ஃப்ரெண்ட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பான ‘ஸ்ரீதர்’ படத்தில், முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிகராக வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் சித்தார்த்துக்கு குரல் கொடுத்திருந்தார்.


 






இந்நிலையில் தற்போது சித்தார்த் சிவகார்த்திகேயனின் படத்துக்கு டப்பிங் கொடுத்துள்ள தகவல் வெளியாகி இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் “வாழ்க்கை ஒரு வட்டம், சிவகார்த்திகேயன் 2011இல் இருந்து இப்போது இப்படி வளர்ந்துள்ளார்” என அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


இசை வெளியீட்டு விழா


அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த மாத இறுதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி முன்னதாக சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சி, தொடர்ந்து சேலம் ஆகிய இடங்களில் அயலான் ஏலியன் தரையிறங்குவதைப் போல் வீடியோ வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளியது.


ஏன் இவ்வளவு லேட்?


2015ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற படம் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநரின் அடுத்த படமாக இப்படம் தயாராகி உள்ளது. முன்னதாக இப்படம் பற்றி பேசிய ரவிக்குமார்,   இன்று நேற்று நாளை படத்தின் பட்ஜெட்டை விட 25 மடங்கு அதிகம் இந்த படத்தின் பட்ஜெட்.


2018 ஆம் ஆண்டு ஷூட்டிங் போன நிலையில் முதல் ஷெட்யூலில் கிட்டதட்ட 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால் அதன்பிறகு நாங்கள் திட்டமிட்டது எதுவும் நடக்கவில்லை. தயாரிப்பாளருக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் படத்தை எப்படியாவது முடிச்சிரலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 2019இலும் தொடங்கிய ஷூட்டிங் நின்னுடுச்சு. 


என்னிடம் நிறைய படம் இந்த படத்தை விட்டுட்டு வேறொரு படம் பண்ணலாம் என சொன்னார்கள். அயலான் படத்துக்கு நிறைய பிராஸ்சஸ் பண்ணி வச்சிருந்தோம்.  அதனை விட்டுட்டு இன்னொரு படம் பத்தி யோசிக்கிறது எப்படி முடியும்? 2020 ஆம் ஆண்டு ஷூட்டிங் தொடங்கினார்ல் கொரோனா ஊரடங்கு வந்துடுச்சி. 2021 ஆம் ஆண்டு தான் கடைசி 50 நாட்கள் படப்பிடிப்பை எடுக்க 3 வருஷமாச்சு. விஎஃப்.எக்ஸ். வேலைகள் நிறைய இருக்குறது தான் தாமதம் ஆகிருக்கு” என ரவிக்குமார் கூறியுள்ளார்.