கேரளாவில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லாதபோது தமிழ்நாட்டில் அந்த படத்தை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை, என்று நடிகை மேக்னா ஹெலன் கூறியுள்ளார்


மஞ்சும்மெல் பாய்ஸ்


ஒரு படம் நன்றாக இருந்தால் அந்தப் படத்தைக் கொண்டாடி, அதை வைத்து ரீல்ஸ் போட்டு ட்ரெண்டாக்கி அதை ஒரு உச்சத்தில் ஏற்றி விடும் ரசிகர்கள். அதே படத்தை கீழே தூக்கி போட்டு மிதிக்கவும் செய்கிறார்கள்.


மலையாள படம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு அப்படியான ஒரு நிலை தொடங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது. நிஜ சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப் சுவாரஸ்யம், கமலின் குணா படத்தின் ரெஃபரன்ஸ், இளையராஜாவின் பாடல் என இந்தப் படத்திற்கு எத்தனையோ அம்சங்கள் சாதகமாக அமைந்துள்ளது.


சமூக வலைதளங்களில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில், பொது இடங்களில் என எங்கு சென்றாலும் நம் காதில் ஒலிக்கும் ஒரே பெயர் மஞ்சுமெல் பாய்ஸின் ஒரே பாடல் கண்மணி அன்போடுதான். இவ்வளவு அதீதமாக ஒரு படம் கொண்டாடப்படும்போது அந்த படத்தின் மீதான வெறுப்பும் வெகுஜனம் மத்தியில் உருவாகி விடுகிறது. ’படம் அவ்வளவு ஒன்னும் சிறப்பா இல்ல’ ’இதுக்கா இவ்வளவு பில்டப் ‘ என்று பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன.


ஜெயமோகன் விமர்சனம்


கூடுதலாக தற்போது எழுத்தாளர் ஜெயமோகன் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை விமர்சிப்பதற்கு பதிலாக படத்தின் கதாபாத்திரங்களை  எதார்த்தத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக தாக்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அந்த வகையில் தற்போது மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தைப் பற்றி அதேபோல் நெகட்டிவான ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார் அரிமாபட்டி சக்திவேல் படத்தின் நாயகி மேக்னா ஹெலன்.


எதுக்கு இப்டி தூக்கி கொண்டாடுறீங்க?


அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’ . இப்படத்தில் குணச்சித்திர நடிகர் சார்லீ , படத்தின் தயாரிப்பாளர் பவன் கே, இமான் அன்னாச்சி , ஹலோ கந்தசாமி, பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள் . இப்படத்தில் நாயகியாக மேக்னா ஹெலன் நடித்துள்ளார். அரிமாபட்டி சக்திவேல் படத்தின் திரையிடலைத் தொடர்ந்து திரையரங்கத்தில் பத்திரிகையாளரை சந்தித்த படத்தின் நடிகை மேக்னா மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பற்றி நெகட்டிவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் “இப்போது மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். நான் மலையாளிதான். கேரளாவில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. அது ஒரு நல்ல படம்தான். ஆனால் அதை ஏன் இவ்வளவு தூக்கி வைத்து இங்கு கொண்டாடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. சமூக ஊடகங்களில் ஒருவர் செய்வதையே மற்றவர்களும் அப்படியே திரும்பி செய்து வருகிறார்கள். ஒரு படம் ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதையே எல்லாரும் ட்ரெண்டாக மாற்றுகிறார்கள். அதே மாதிரி சின்ன பட்ஜெட் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை, எங்களோட சின்ன படமான அரிமாபட்டி சக்திவேல் மாதிரியான படங்களுக்கும் மக்கள் கொடுக்கணும்னு கேட்டுக்குறேன்” என்று அவர் கூறியுள்ளார்.