ஆம்ஸ்ட்ராங் கொலை


பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இரு சக்கரங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இந்த கோர சம்பவத்தை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக போலீசார்  தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர்.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. குற்றவாளிகள் சரணடைந்துவிட்டதால் காவல் துறையினர் விசாரணையை கைவிடக் கூடாது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.


திட்டம் போடாமலா செய்திருப்பார்கள்






இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் “நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே பெரம்பூரில் தான் இருக்கிறேன். இப்போது என் அம்மா வீடும் பெரம்பூரில் தான் இருக்கிறது. வடசென்னைக்கு உள்ளே வருவது என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால் இன்று உள்ளே நுழையும் போதே சென்னையை பார்க்க அவ்வளவு பயமாக இருக்கிறது. ஒரு தேசிய கட்சியின் தலைவரை அநியாயமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். ஏற்கனவே அவரை நாம் இழந்துவிட்டோம். இப்போது சரணடைந்திருக்கும் ஆறு பேர்தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது. இவ்வளவு கொடூரமான குற்றத்தை அது பெரிய பிரச்சனையாக மாறும் என்று தெரிந்தும் எந்த வித திட்டம் இல்லாமலா இதை செய்திருப்பார்கள். சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தில் வருவது போல் ஒரு குற்றத்திற்காக சரணடையச் சொல்லி நட்டி ஒவ்வொருத்தருக்கா ஃபோன் செய்து கேட்பார். ஒரு சின்ன கேஸூக்கே அப்படி என்றால் இந்த மாதிரியான ஒரு குற்றத்தை முன்கூட்டியே திட்டம் போட்டு செய்திருக்க மாட்டார்கள் என்று எப்படி நம்புவது. ஒரு பொது இடத்தில் ஒருவரை ஆறு நபர்கள் வெட்டிக்கொல்லப் படுகிறார் அதுவும் ஒரு கட்சியில் இருக்கக் கூடிய அரசியல் பிரமுகர்களுக்கே இப்படியான ஒரு நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி அச்சமில்லாமல் இருக்க முடியும்” என்று அனிதா சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்