ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்:


ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ்  - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் இன்று அதாவது மார்ச் 3ம் தேதி வரை நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரபல ஹாலிவுட் பாப் பாடகியான ரிஹானாவின் இசை நிகழ்ச்சியோடு கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.


பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், பில் கேட்ஸ், தோனி , சச்சின் டெண்டுல்கர் உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். திரையுலகைப் பொறுத்தவரை இந்திய திரைப்படத் துறையின் உச்சநட்சத்திரங்கள் தங்களது குடும்பத்தும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.


பிரபலங்கள் பங்கேற்பு:


குறிப்பாக நடிகைகள் பலர் பல லட்சம் மதிப்புள்ள ஆடை அலங்காரத்துடன் தோன்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. 


விளையாட்டு துறை சார்பில் சச்சின் டெண்டுல்கர் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜாஹிர் கான், முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரு பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலமே கொண்டாட்டங்களால் களைகட்டியது. 


அதேசமயம் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், சித்தார்த் மல்கோத்ரா,  ஷாருக்கான், அமீர் கான், அக்‌ஷய்குமார், ராம் சரண், நடிகைகள் தீபிகா படுகோன், மாதுரி தீக்சித், கியரா அத்வானி, அனன்யா பாண்டே, இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் திரைத்துறை சார்பில் கலந்து கொண்டனர்.


"ஆனந்த் மற்றும் ராதிகாவுக்கு வாழ்த்துகள்”






மூன்றாவது மற்றும் கடைசி நாளான நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தனது மனைவி, மகளுடன் கலந்துகொண்டார். இந்த நிலையில், அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய அவர், ”முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியும் திருமணத்துக்கு முன்பாக மூன்று நாட்கள் நடத்திய கொண்டாட்டங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. வைகுண்டம் மற்றும் கைலாசத்தை உலகுக்கு கொண்டு வந்தது போன்று மிக பிரம்மாண்டமாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.  ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார் நடிகர் ரஜினிகாந்த்.