ஒரு தாயின் பிடிவாதம் ஒரு சாதாரண சிறுவனை எப்படி சுயநலக்காரனாக, கொலைகாரனாக, வில்லனாக, மக்களின் அபிமானம் பெற்ற கடவுளாக, தங்கச்சுரங்கத்தை ஆளும் அரசனாக மாற்றுகிறது என்ற கதையை ராவாக எடுத்து கன்னட சினிமாவை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கே.ஜி.எஃப் சீரிஸ். முதல் பாகம் அதிரி புதிரி ஹிட் ஆனதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு கடுமையான எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


எதிர்பார்ப்பை கொஞ்சமும் குலைக்கவில்லை என்றும் நல்ல சீக்வல் என்றும் பெயர் பெற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.



இந்த படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். திரைப்படத்தின் மேக்கிங்கை தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் உலகம் முழுவதும் 10000 க்கும் மேற்பட்ட திரைகளில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. கேஜிஎப் 2 இத்தனை திரைகளில் ரிலீஸாகி இருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தும் இந்த படத்துக்கு 350 திரைகள் வரை மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஏனென்றால் நேற்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகளவில் வெளியாகி இருந்தது.






பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற ரிவ்யூக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், கேஜிஎப் 2-வுக்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகள் நாளையில் இருந்து ஒதுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்றுள்ள மெஹ்பூபா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டு மைலேஜ் ஏற்றி உள்ளனர்.


இந்த ரொமான்டிக் பாடலில் யஷ் மற்றும் ஸ்ரீநிதி நடித்துள்ளனர். இந்த பாடல் இசை அமைப்பாளர் பஸ்ரூர் இசையமைப்பில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் பாடல்கள் மொத்தமாக ரிலீஸ் செய்யப்படாமல் ஒவ்வொரு பாடலாகத்தான் வெளியிடப்பட்டது. தற்போது மூன்றாவதாக வெளியாகியுள்ள இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.