நடிகர் பார்த்திபன் நடித்து வெளியான  'இரவின் நிழல்' படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. 


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன்  கடந்த ஜூலை 15 ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  






இந்த படத்தை ரஜினிகாந்த் உட்பட திரைப்பிரபலங்கள் பாராட்டிய நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் fish and cat என்ற படம் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றும், இரவின் நிழல் இல்லை என்றும் தெரிவித்து பார்த்திபனை குற்றம்சாட்டினார். மேலும் வீடியோ ஒன்றில் தனது 14  கேள்விகளுக்கு விடையளிக்குமாறு வீடியோ ஒன்றையும் முன்வைத்தார். ஆனால் இதை மறுத்த பார்த்திபன் பதிலடி கொடுக்கும் வகையில் படம் குறித்த தகவல்களை தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்குமான கருத்துமோதல் முற்றியது. இதனால் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 


இதற்கிடையில் இரவின் நிழல் படம் இன்று ஓடிடியில் வெளியானது. பல முறை இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், இன்று காலை தனக்கு கூட தெரிவிக்காமல் அமேசானில் படம் வந்துவிட்டதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார். மேலும் முறையான அறிவிப்போடு வந்திருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தையும் வீடியோ வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார். அப்போதும் கூட உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம்  என்பதையும் முன்னிறுத்தியே பேசியிருந்தார். 






ஆனால் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் இப்படம் உலகின் 2வது நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இரவின் நிழல் படத்தின் வெற்றியே அப்படத்தின் கதைக்குள் செல்வதற்கு முன் காட்டப்படும் மேக்கிங் காட்சிகள் தான். அதில் படக்குழுவினரின் முயற்சியும், கடைசியில் இரவின் நிழலாக அது வெற்றி பெற்றதும் தான் இப்படம் உலக அளவில் பேசப்பட காரணமாக அமைந்தது. ஆனால் அமேசான் தளத்தில் இரவின் நிழலில் மேக்கிங் காட்சிகள் முழுவதும் கட் செய்யப்பட்டு படம் வெளியாகியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பார்த்திபனிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.