நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்றொரு சர்ச்சைக் கதைக்களம் கொண்ட படம் மூலம் அறிமுகமானவர். மைனா படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் ஆடை என்ற படத்தில் அவர் நடித்ததற்காகப் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். எதற்கெடுத்தாலும் பெட் கட்டும் நடிகை ஆடையில்லாமல் ஒரு கட்டிடத்தில் மாட்டிக் கொள்ளும் கதைதான் ஆடை. அந்தப் படத்தில் அவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியானதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். 


ஆனால் கதையில் வரும் பாத்திரம் போலவே தனது கதாபாத்திரத்தை நியாயப்படுத்தி அவர் துணிச்சலாகப் பேசி அப்லாஸ் பெற்றார். ஆடை படத்துக்கு பிறகு மலையாளத்தில் கவனம் செலுத்தி வரும் அமலாபால் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். 2019ம் ஆண்டே கடவர் என்ற படத்தை தமிழிலும், மலையாளத்திலும் அமலாபால் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. தடய நோயியல் நிபுணராக இப்படத்தில் அமலாபால் நடிப்பதாக கூறப்படுகிறது.  அதேபோல் படத்தின் போஸ்டரும் உருவாக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின்போது பல உடல்களுக்கு நடுவே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் அமலாபால்.






கேரளாவின் பிரபல தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் என்பவரால் எழுதப்பட்ட 'ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


முன்னதாக இப்படம் குறித்து 2019ல் பேசிய அமலாபால், இப்படத்துக்காக ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள் புத்தகத்தை முழுமையாக  வாசித்தேன். அதுமட்டுமின்றி, ஒரு தடய அறுமை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன். இதனை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது. அதனால் இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த இரு தயாரிப்பாளர்களுடன் நானும் இணைந்து இணை தயாரிப்பாளராகியுள்ளேன். என்றார்




இன்று அமலாபாலின் பிறந்த தினத்தை அடுத்து கடவரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பிறந்தநாள் குறித்து பேசிய அமலாபால்,  நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். தினம் தினம் கடவுளுக்கு நான் நன்றி சொல்வேன். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை என நான் உணர்வேன். சுய நலமாக இல்லாமல் மனம் சொல்வதைக் கேட்க வேண்டும். எனக்கு அழகான குடும்பம் உள்ளது. அழகான நண்பர்கள். ரசிகர்கள் எனக்கு உள்ளார்கள். என்னுடைய கடினமான காலங்களில் எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள்.இதுதான் அழகான பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்