தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பாரில் கணவன் பெயரில் உள்ள வீட்டை எழுதி தர வலியுறுத்தி கணவன் மீது மனைவியே வெந்நீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் வெந்த நிலையில் கணவன் இனிகோ அளித்த புகாரின் அடிப்படையில் சூரங்குடி போலீசார் மனைவி மரிய வினோ-வை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில்  கணவரை பலமுறை சித்திரவதை செய்ததும் தெரியவந்துள்ளது. 


                                  

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த இனிகோ(41) என்பவர் மீனவராக வேலை செய்து வருகிறார். மீனவர் இனிகோ-விற்கும், மரிய வினோ என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இனிகோவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி மரிய வினோ, கணவன் இனிகோ வின் பெயரில் உள்ள வீட்டினை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு கணவன் இனிகோ மறுத்துள்ளார்.


                                  

இதனால் கணவன் - மனைவி இடையே இதுசம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ; வேலையை முடித்து விட்டு இனிகோ வீட்டிற்கு சென்ற போது, மனைவி மரிய வினோ, வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் தரக்குறைவாக பேசி, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி தயார் செய்து வைத்திருந்த சூடான வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். சற்றும் எதிர்பாராத இனிகோ, வெந்நீரை பட்டு உடல் வெந்து நிலைகுலைந்து போயுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தப்பின் மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


                                  

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இனிகோ தன் மனைவி மரிய வினோ மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரங்குடி போலீசார் மரிய வினோ- வை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில், சொத்தை எழுதி கொடுக்க கட்டாயப்படுத்தி, மரிய வினோ கணவருக்கு கண்ணில் மிளகாய் பொடி தூவதல் என பல்வேறு வழிகளில் இடைஞ்சல் கொடுத்து துன்புறுத்தி வந்ததும், கொலை செய்யும் அளவிற்கு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.