இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவான "புஷ்பா : தி ரைஸ்" திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது  இருப்பினும் படத்தில் இடம் பெற்ற அல்லு அர்ஜுனின் ஸ்டைல், ஊ சொல்றியா பாடல், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை உள்ளிட்டவை படத்தை உலக அளவில் கவனம் பெற செய்தது. 


முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக, படத்தின் இராண்டாம் பாகமான  ‘புஷ்பா: தி ரூல்’ மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்மையில் இந்தப்படம் தொடர்பான நடைபெற்ற போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் பகிர்ந்து இருந்தார். 


 






இந்த நிலையில், இந்தப்படம் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அப்டேட்டின் படி புஷ்பா பாகம் 2 படத்தின் முதற்கட்ட படப்படிப்பிற்காக படக்குழு வருகிற நவம்பர் 13 ஆம் தேதி பாங்காக் செல்ல இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. 15 நாட்கள் அங்கு நடக்க இருக்கும் படப்பிடிப்பில்,சண்டைக்காட்சிகள் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அந்தப்படப்பிடிப்பு முடிந்து திரும்பும் அல்லு அர்ஜூன், அதனைத்தொடர்ந்து ரஷ்யாவில் வெளியாக இருக்கும் புஷ்பா 1 படத்தின் பிரோமோஷன் தொடர்பான பணிகளில் ஈடுபட இருக்கிறாராம். 


முன்னதாக, மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் புஸ்பா : தி ரைஸ் திரைப்படம் 'உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்' என்ற பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. சிறப்புத் திரையிடலில் அமோக வரவேற்பை பெற்றதன் காரணமாக முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தை டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவில் வெளியிட குழு திட்டமிட்டுள்ளது. 


அல்லு அர்ஜுன் தற்போது தனது படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் அவரது கால்ஷீட்டை பொறுத்து தயாரிப்பாளர்கள் புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தை ரஷ்யாவில் வெளியிடும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய உள்ளனர். படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக ரஷ்யாவிற்கு செல்ல இருக்கிறது படக்குழு. அவர்களுடன் நடிகர் அல்லு அர்ஜுன் இணைவார் என சொல்லப்படுகிறது.