குழந்தை பிறந்த ஒன்றரை மாதங்களில் தலைகீழாக யோகா செய்தபடி அலியா பட் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.


பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான அலியா பட்டும் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான ரன்பீரும் கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்தைத் தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அலியா அறிவித்து தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அலியா, முன்னதாக  தனது டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா படங்களின் ப்ரொமோஷன் பணிகளில் கலந்து கொண்டு அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.


தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி அலியா - ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு ’ராஹா’ எனப் பெயரிட்டுள்ளதாக முன்னதாக அலியா தன் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்திருந்தார்.


தற்போது குழந்தை பிறந்த ஒன்றரை மாதங்களைக் கடந்துள்ள நிலையில், முன்னதாக ஏரியல் யோகா எனப்படும் தலைகீழாகக் கயிற்றில் தொங்கியபடி செய்யும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அலியா பட் அசத்தியுள்ளார்.


தனது யோகா ஆசிரியையின் வழிகாட்டுதலின் படி இந்த யோகா பயிற்சிகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் தன் இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ள அலியா, ”சக தாய்மார்களே பிரசவத்த்துக்குப் பிறகு உங்கள் உடலிடம் கேள்வி கேட்பது முக்கியம். உங்கள் உள்ளம் வேண்டாம் என்று சொல்லும் எதையும் செய்யாதீர்கள்.


 முதல் வாரத்தில் நான் செய்ததெல்லாம் மூச்சு விடுவது, நடைப்பயிற்சி, எனது நிலைத்தன்மை மற்றும் சமநிலையை மீண்டும் கண்டறிதல் தான். நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.  பிரசவம் என்பது எல்லா வகையிலும் ஒரு அதிசயம். அது உங்களுக்குக் கொடுத்த அன்பையும் ஆதரவையும் உங்கள் உடலுக்குக் கொடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.






மேலும் ஒவ்வொரு உடலும் வித்தியாசமானது, இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர்களை ஆலோசிப்பது மிக அவசியம் என்றும் அலியா பகிர்ந்துள்ளார்.


அலியாவின் இந்த முயற்சியைப் பாராட்டி அனுஷ்கா ஷர்மா, சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.