தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ அஜித்திற்கு உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸாக அவரின் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியது.


வங்கி கொள்ளையை மையாக வைத்து வெளியான இப்படத்தினை போனி கபூர் தயாரிக்க ஹெச். வினோத் இயக்கியிருந்தார். மூன்றாவது முறையாக இந்த மூவரின் கூட்டணி துணிவு திரைப்படம் மூலம் இணைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 


 



சிறந்த மனிதர்:


அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதை காட்டிலும் ஒரு மனிதாபிமானமுள்ள சிறந்த மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி அவர் செய்த ஒரு செயல் சோசியல் மீடியாவில் வைரலாக  பகிரப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது. ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதற்கு பின்னணியில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து மனம் திறந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அந்த பதிவின் படி அந்த ரசிகரின் மனைவி கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு அவர்களின் 10 மாத குழந்தையுடன் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது லண்டன் ஹீத்ரோவில் நடிகர் அஜித்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சமயத்தில் அஜித்துடன் ஒரு போட்டோ எடுத்துள்ளார். ரசிகரின் மனைவி தனியாக பயணம் மேற்கொள்ள இருப்பதை  அறிந்துகொண்ட அஜித், அந்த பெண்ணிடம் இருந்த ஒரு கேபின் சூட்கேஸ் மற்றும் பேக்கை விமானம் வரை எடுத்து கொண்டு வருவதாக தூக்கி கொண்டுள்ளார். அந்த பெண் எவ்வளவு தடுத்தும் பரவாயில்லை எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால் இது எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும் என சூட்கேசையும் பேக்கையும் எடுத்து கொண்டு போய் கேபின் குழுவினரிடம் ஒப்படைத்து அதை அந்த பெண்ணின் இருக்கையின் அருகில் தான் வைக்கப்பட்டதா என்பதையும் உறுதி செய்துள்ளார். 


 



வியந்த ரசிகர்கள்:


அஜித்துடன் பயணம் செய்தவர் தான் அதை எடுத்து கொண்டு வருவதாக கூறியும் பரவாயில்லை இருக்கட்டும் என கூறி தானே எடுத்து சென்றுள்ளார். ஷட்டில் பஸ்சில் பயணம் செய்யும் போது கூட அந்த பெண் நானே எடுத்துக் கொள்கிறேன் என சொல்லியும் அஜித் அதை மிகவும் தன்மையுடன் மறுத்துள்ளார். அவருடைய அந்தஸ்திற்கு அவர் இதை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவரின் இந்த செயல் ஒரே நொடியில் என்னை சாய்த்துவிட்டது. நான் அவருடைய தன்மையான ஆட்டிடியூட் பார்த்து நான் வியந்தேன் என அந்த ரசிகர் தனது மனைவிக்கு நடிகர் அஜித் செய்த உதவியை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  


நடிகர் அஜித்குமார் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி லைக்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள்.