அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவை ஒட்டி நடிகர் அஜித்துக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.


அஜித் தந்தை உயிரிழப்பு


கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்து வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் தன் 85ஆவது வயதில் இன்று (மார்ச்.24) அதிகாலை உயிரிழந்தார். 


இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் சுப்பிரமணியம் உயிரிழந்த நிலையில், தந்தையை இழந்துவாடும் அஜித்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பல அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஜித் இல்லத்துக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.


விஜய் நேரில் சென்று ஆறுதல்


அந்த வகையில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரும் அஜித்துடன் சம காலத்தில் தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவருமான நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். 


சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்துக்குச் சென்று விஜய் ஆறுதல் தெரிவித்த நிலையில், இந்தத் தகவல் இணையத்தில் அஜித் - விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


விஜய் - அஜித் நட்பு


நடிகர் அஜித் - விஜய் இருவரும் 1995ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ எனும் படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், அதுமுதல் இருவரும் தங்கள் திரை வாழ்வு தாண்டி நட்புணர்வுடனேயே பழகி வந்துள்ளனர். 


மேலும் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் விஜய் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், அஜித் குடும்பமும் விஜய் குடும்பமும் நல்ல நட்பைப் பேணி வருகின்றனர்.


முன்னதாக சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் துணிவு - விஜய்யின் வாரிசு படங்கள் இந்தப் பொங்கலுக்கு ஒன்றாக திரையரங்குகளில் வெளியான நிலையில், இருதரப்பு ரசிகர்களுக்கும் மத்தியில் சமூக வலைதளங்களில் மோதல் போக்கு நிலவி வந்தது. இத்தகைய சூழலில் அஜித் வீட்டுக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


அஜித் அறிக்கை


அஜித் குடும்பத்தினர் தரப்பில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தையார் திரு.பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.


இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.


எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பயும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் - அனுப் குமார், அஜீத் குமார், அனில்குமார்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.