ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டுபோன வழக்கில் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருடிய பெண்ணைக் கைது செய்ததுடன் காவல் துறையினர் ஒரு கோடி மதிப்புள்ள சொத்து ஆவணத்தை மீட்டுள்ளனர். 


இந்நிலையில், திருடிய நகைகளைக் கொண்டு பணிப்பெண் சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நேற்று (மார்ச்.20) தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் “நான் தற்போது போயஸ் கார்டனில் உள்ள எனது தந்தை ரஜினிகாந்த் வீட்டில்  வசித்து வருகிறேன். 2019ஆம் ஆண்டு எனது தங்கைக்கு திருமணம் நடந்த நிலையில், அன்றைய நாளிலிருந்து எனக்கு சொந்தமான நகைகளை லாக்கரில் வைத்து தனியாக பராமரித்து வருகிறேன். கிட்டதட்ட 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளோடு பாரம்பரிய நகைகளும்  அந்த லாக்கரில் இருந்தது. 


இதற்கிடையில் 2021ஆம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் உள்ள வீட்டிலும், அதன்பிறகு சிஐடி நகரில் உள்ள எனது கணவரின் வீட்டிலும், பின்னர் போயஸ் கார்டனுக்கு குடியேறிய போதும் 3 வீடுகளிலும் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது.


அதேசமயம் செயின்ட்மேரிஸ் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் நான் இருந்தபோது லாக்கர் சாவியை அலமாரியில் தான் வைத்திருப்பேன். இது என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும்.


நான் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவர்கள் அங்கு சென்று வந்தனர். இதனிடையே கடந்த மாதம் 10 ஆம் தேதி லாக்கரை திறந்துப் பார்த்தப்போது அதில் சில நகைகள் மட்டுமே இருந்தது.


பல மதிப்புமிக்க மற்றும் பாரம்பரிய நகைகளை காணவில்லை. இது தொடர்பாக எனது வீட்டில் பணி செய்யும் 3 பேர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது.காவல் துறையினர் விசாரணை நடத்தி எனது நகைகளை மீட்டுத்தர வேண்டும்" எனக் கோரியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஐஸ்வர்யா அளித்த புகைப்படங்கள் அடிப்படையாகக் கொண்டு பணிப்பெண்கள் கார் ஓட்டுநர் ஆகியோரிடம் முன்னதாக விசாரணை நடத்தினர். இதில் பணிப்பெண் ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக நகைகளைத் திருடி வந்ததும், இதுவரை 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Ponniyin Selvan 2 : பொன்னியின் செல்வன் 2: வந்தியத்தேவன் - குந்தவை காதல் காட்சிதான் பெஸ்ட்... சிலாகித்த சுஹாசினி மணிரத்னம்!