`இருட்டு அறையில் முரட்டு குத்து’ முதலான திரைப்படங்களில் நடித்தவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவருமான நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை 25 அன்று சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது தோழி இந்த விபத்தில் பலியாகினார். 


கடந்த ஜூலை 25 அன்று, புதுச்சேரியில் இருந்து சென்னைக்குத் தனது நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மகாபலிபுரம் அருகில் வந்துகொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து கிழக்குக் கடற்கரை சாலையில் நடுவில் இருந்த தடுப்பில் மோதி, குழிக்குள் விழுந்தது. நடிகை யாஷிகா ஆனந்த் கைகளிலும், கால்களிலும் எலும்பு முறிவு, காயங்கள் ஆகியவற்றுடன் படுகாயம் அடைந்திருந்தார். எனினும், அவருடன் பயணித்த அவரது நெருங்கிய தோழி வள்ளி ஷெட்டி பவானி விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தார்.



விபத்துக்குப் பிறகு, தனது அம்மாவுடன் யாஷிகா ஆனந்த்


 


சாலை விபத்து நடந்து கடந்த பல வாரங்களாகச் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகை யாஷிகா. தன் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை யாஷிகா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தன் அம்மா ஊட்டிவிட்டு உணவு உண்பதைப் பதிவு செய்திருந்தார் யாஷிகா; அதன்பிறகு, எழுந்து நிற்பதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்திய நிலையில் நின்றுகொண்டிருந்தவாறு தனது படத்தையும் பதிவிட்டிருந்தார் யாஷிகா ஆனந்த். 






இந்நிலையில் தற்போது யாஷிகா தன் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பகுதியில் பிஸியோதெரபி மருத்துவர்களின் உதவியோடு கைகளின் இரு பக்கங்களிலும் கம்பியைப் பிடித்தவாறு நடை பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதைப் பகிர்ந்துள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோவில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய இடுப்பு எலும்பின் எக்ஸ் ரே படத்தையும் சில செகண்ட்கள் ஓடுமாறு பகிர்ந்திருந்தார். அதில் அவரது எலும்பில் ஏற்பட்டிருந்த முறிவு தெளிவாக தெரியும் வண்ணம் இருக்கிறது.



யாஷிகா ஆனந்த்


 


நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களைக் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகையில், அவரது ரசிகர்களும், நண்பர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, தொடர்ந்து போராடுமாறு அவருக்கு ஊக்கமளித்தும் வருகின்றனர். எனினும் பலர் அவர் படுகாயம் அடைந்த விபத்தின் போது, அவரது நெருங்கிய தோழி வள்ளி செட்டி பவானி இறந்ததற்கு யாஷிகா தான் காரணம் எனவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களால் தான் கடுமையான குற்றவுணர்வால் தவிப்பதாகவும் யாஷிகா சில வாரங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அப்போதும் பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்ததோடு, இந்த விவகாரத்தில் அவரோடு நிற்பதாகவும் கூறியிருந்தனர்.