பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, யூட்யூப் சேனல், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என நடிகை வனிதா விஜயகுமார் அவ்வப்போது ஆன்ஸ்கிரீனில் தோன்றி வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டு சுரேஷ் சக்ரவர்த்தி ஜோடியாக அந்த நிகழ்ச்சியில் நடனமாடி வந்தார்.


நடிகை ரம்யா கிருஷ்ணன், நகுல் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் இவர் நடனமாடி வந்தார். இந்நிலையில், அடுத்த நிகழ்ச்சிக்காக ’காளி’ அவதாரம் எடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.






இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறும் முன், நான் ஏற்படுத்தியிருக்கும் ‘இம்பாக்ட்’-ஐ அனைவரும் உணர வேண்டும் என நினைத்தேன். பிக் பாஸ், குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வந்தேன். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், பணியாற்றும் இடத்தில் நம்மை தரக்குறைவாக இழிவுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பணியிடத்தில் நான் துன்புறுத்தப்பட்டேன், வம்புக்கு இழுக்கப்பட்டேன். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சக பெண்களை பொறாமையின் பேரில் கொச்சப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகின்றது.






சீனியர் ஒருவர், ஜூனியர்களை உத்வேகப்படுத்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவ வேண்டும். குறிப்பாக, 3 பெண் குழந்தைகளுக்கு தாயாக, யாருடைய தயவும் இன்றி தனி ஆளாய் முன்னேறி வரும் என்னை போன்ற அம்மாக்களுக்கு ஆதரவாக இருப்பது அவசியம், அவர்களின் வளர்ச்சியை தடுக்க முயல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு அல்ல, பங்கேற்பதும் வெற்றிதான். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி எனக்கு ஒரு நல்ல பார்ட்னராக இருந்தார். என்னை மன்னித்துவிடுங்கள், சுரேஷ். என்னுடைய முடிவால் இனி இந்நிகழ்ச்சியில் நீங்கள்  தொடர முடியாமல் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதற்கு ரம்யா கிருஷ்ணன் தெரிவித்த கமெண்ட்ஸ்தான் காரணமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.