விருமன் படத்தில் நடித்தது குறித்து நடிகை வடிவுக்கரசி நேர்காணல் ஒன்றில் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். 


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம்  கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 






விருமன் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், கார்த்தி, அதிதி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும் நல்ல வசூலை பெற்றுள்ள இப்படம் வார இறுதி நாட்களில் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளோடு திரையிடப்பட்டு வருகின்றது. 


இந்த படத்தில் கார்த்தியின் அப்பத்தா கேரக்டரில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி நடித்திருந்தார். அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றுள்ள நிலையில் நேர்காணல் ஒன்றில் விருமன் படத்தில் நடிக்க கிடைக்க வாய்ப்பு குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் இயக்குநர் முத்தையா முதன்முதலில் இயக்கிய குட்டிப்புலி படத்தில் சரண்யாவுடன் வரும் கேரக்டரில் நடிக்க என்னை தான் அணுகினார். அப்போது நான் திருமதி செல்வம் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். கதை கேட்டு விட்டு சரி என சொன்னேன். ஆனால் அதன்பிறகு முத்தையா நடிக்கவே கூப்பிடவில்லை. 






அதேபோல் மருது படத்தில் விஷால் பாட்டி கேரக்டருக்கு டப்பிங் பேச கூப்பிட்டார்கள். நான் பேசப்போகிறேன் என தெரிந்ததும் முத்தையா வேண்டாம் என மறுத்து விட்டார். அடுத்ததாக விருமன் படத்திற்கு அணுகிய போது முத்தையாவிடம் இந்த படத்திலாவது என்னை நடிக்க வைப்பீர்களா என கேட்டேன். அவர் கண்டிப்பாக நீங்கள் தான் பண்ண வேண்டும் என கூறினார். கார்த்திக்கு அப்பத்தா, பிரகாஷ்ராஜ் அம்மாவாக நடிக்கப்போவதை நினைத்துப் பார்த்தால் முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்கப் போகும் போது ஏற்படும் மகிழ்ச்சி ஏற்பட்டது என நேர்காணலில் வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.