தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கான மழை காட்சி ஒரு திட்டமிட்ட கொலை என நடிகை ஷோபனா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


நடிகை ஷோபனா:


1980 ஆம் ஆண்டில் வெளியான மங்களநாயகி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபனா, 1984 ஆம் ஆண்டு தமிழில் எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். அதற்கு முன்னாள் மலையாளம், தெலுங்கில் அவர் அறிமுகமாகியிருந்தார். ஷோபனாவுக்கு 1988 ஆம் ஆண்டு வெளியான இது நம்ம ஆளு படம் திருப்புமுனையாக அமைந்தது. 


தொடர்ந்து பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, பொன்மனச் செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை, தளபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஷோபனா, ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 


1989 ஆம் ஆண்டு சிவா படம் வெளியானது. அமீர்ஜானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபனா, ரகுவரன், சௌகார் ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.  இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தனது கவிதாலயா நிறுவனம் சார்பில் சிவா படத்தை தயாரித்திருந்தார். 


உண்மையை சொல்லாத ரஜினி


ரஜினிகாந்த் ஒரு பக்கா ஜென்டில்மேன். சிவா படத்தில் ஒரு மழைக்காட்சி எடுத்தார்கள். ஆனால் என்னிடம் சொல்லவே இல்லை. நான் காஸ்ட்யூம் டிசைனரிடம் கேட்டேன். உங்ககிட்ட சொல்லலையா என அவர் கேட்டார். அந்த ஆடை ரொம்ப வெளிப்படையாக இருந்தது. நான் உள்ளே உடுத்த உடை எதுவும் இல்லை என தெரிந்தவுடன் வீட்டுக்கு போயிட்டு வரலாமா எனக் கேட்டேன். ஆனால் ​​பத்து நிமிடத்தில் ஷூட் போகப் போகிறோம் என சொன்னார்கள். 


மழைக்காட்சி திட்டமிட்ட கொலை:


சினிமாவில் ஹீரோயின்களுக்கான மழைக்காட்சி என்பது திட்டமிட்ட கொலை என்று நினைக்கிறேன். மேலும் இது ஒரு பெரிய நிறுவன தயாரிப்பு என்பதால் படப்பிடிப்பு தாமதத்திற்கு நான் பொறுப்பேற்க விரும்பவில்லை. இதனால்  ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த ஒரு பிளாஸ்டிக் டேபிள் கவரை எடுத்து சேலைக்குள் சுற்றிக் கொண்டு ஷாட்டுக்கு ரெடியானேன். படப்பிடிப்பின் போது ரஜினி  என்னை தூக்கிக் கொண்டு டான்ஸ் ஸ்டெப் போட வேண்டும். அப்படி செய்த போது உள்ளே இருந்த டேபிள் கவர் சத்தம் கேட்டது. இதனால் அவர் குழப்பமானார். ஆனால் புரிந்து கொண்டார். ஆனால் இன்று வரை ரஜினி இந்த விஷயத்தை வெளியே சொன்னதே இல்லை. 


அதேசமயம் தளபதி படத்தில் நடித்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. காரணம் அதிகாலை நேரம் ஷூட்டிங் இருப்பது தான். அந்த படத்தில் ராக்கம்மா பாடலில் நடனம் அமைத்தேன். இப்போது எங்கு சென்றாலும் தளபதி பட ஹீரோயின் என அடையாளம் காண்கிறார்கள்” என ஷோபனா கூறினார்.