சினிமாவில் நான் நடிக்க முதல் முறையாக உத்வேகம் கொடுத்த விஷயம் என்ன என்பதை நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். 


சென்னையை சேர்ந்த நடிகை ஷகீலா, 1994 ஆம் ஆண்டு வெளியான பிளே கேர்ள்ஸ் என்னும் படத்தின் மூலம் தனது 18 வயதில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ்,மலையாளம், கன்னடம், இந்தி, ஒடியா, தெலுங்கு ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். அதேசமயம் மலையாள திரையுலகில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட அவர் ஆபாச படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அந்த பாதையில் இருந்து விலகி நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். 


தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ் மகன், மாஞ்சா வேலு, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்ம, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கன்னி ராசி   உள்ளிட்ட பல படங்களில் அவரது காமெடி நல்ல வரவேற்பை பெற்றது. 2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக ஷகீலா கலந்து கொண்டார். சின்னத்திரையிலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆல் ரவுண்டராக ஷகீலா வலம் வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது சீசனில் கலந்து கொண்ட ஷகீலா ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றார். இவரது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தியில் “ஷகீலா” படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. 


இவர் தற்போது தனியார் ஊடகம் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் கண்டு அவர்களின் அறியப்படாத பக்கங்களை வெளியே கொண்டு வருகிறார். அவரின் இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் 90களில் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த குண்டு கல்யாணத்தை நேர்காணல் கண்டுள்ளார்.  


அந்த நேர்காணலில் பேசும் ஷகீலா,  ராம்கி, நீங்கள் (குண்டு கல்யாணம்) நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்தது. நான் அப்போது உங்களை பார்த்திருக்கிறேன்.ஆட்டோகிராஃப் எல்லாம் வாங்கிருக்கேன். அதன்பிறகே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. காரணம், என்னோட பள்ளி ஆடிட்டோரியம்ல தான் ஷூட்டிங் வந்த எல்லோருக்கும் சாப்பாடு நடந்தது.  நான் நல்லா சாப்பிடுபவள். நம்ம வீட்டுல ஒரு நாளைக்கு ஒரு குழம்பு, பொரியல் வைப்பார்கள். ஆனால் இத்தனை வெரைட்டி வருதான்னு பார்த்ததும் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது என அந்நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சாப்பாடு மேல் உள்ள பிரியம் இந்த அளவுக்கு கொண்டு வந்து விடுமா என தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.