ரசிகர்கள் விரைவில்  தன்னை திரையில் காணலாம் என நடிகை ரம்பா கூறியுள்ளார். 


90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என ஒரு நீங்கா இடம்பிடித்தவர். 15 வயதில் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிய ரம்பா, 1993ம் ஆண்டு வெளிவந்த உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். 


தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என 20 ஆண்டுகளுக்கு மேல் 100 படங்களில் நடித்த ரம்பா திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பினார். கனடாவில் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 90களில் ரம்பாவுடன் இணைந்து நடித்த லைலா, ஜோதிகா ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வரும் நிலையில் ரம்பா எப்பொழுது நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது. 


ரம்பாவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அவர் தமிழில் நடிக்கவே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது குறித்து ரம்பா பேசுகையில், “திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன். ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்தபோது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். 


இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை. ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன். இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்பு தான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. 


சினிமாவை தொடர்ந்து கவனித்து  கொண்டுதான் இருக்கிறேன். இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விஷயங்கள்  பேசிக்கொண்டு இருப்பேன். என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில்  பார்க்கலாம்” என கூறியுள்ளார்.