இணையத்தில் சாமான்யர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் மட்டுமின்றி, சமயங்களில் பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளும் ஹேக்கிங் செய்யப்படுகின்றன. இந்த ஹேக்கிங் விவகாரத்தில் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர் நடிகை ராதிகா. தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். 


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா, `ஹாய்.. என் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் பதிவிடப்படப்படுபவை, மெசேஜ்கள் முதலானவற்றில் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முயற்சி செய்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



மகள் ரயேன் மிதுனுடன் ராதிகா சரத்குமார்


 


தனது ட்விட்டர் கணக்கைப் பின்தொடர்பவர்களிடம் எச்சரிக்கும் விதமாக, நடிகை ராதிகாவின் மகள் ரயேன் மிதுன் தன் ட்விட்டர் பக்கத்தில், `ராதிகாவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் இருந்து அனுப்பப்படும் மெசேஜ்களைத் திறக்காதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். 






நடிகை குஷ்பூ இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய நடிகை குஷ்பூ, `எனது நல்ல நண்பரும், அதீத திறமை மிக்கவருமான ராதிகாவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் எழுப்பப்பட்டு, இந்த விவகாரம் சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் மக்களோடு தொடர்பில் இருக்க முடியாமல் போனதற்காக அவர் மன்னிப்பு கோருகிறார். எனினும், விரைவில் உங்களுடன் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார். 






நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ராதிகா தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தைப் பகிர்ந்திருந்தார். மேலும் அவர் நேற்று நடிகர் அஜித் குமார் நடித்துள்ள `வலிமை’ படத்தின் `மதர் சாங்’ வீடியோவைப் பகிர்ந்து, `அழகான பாடல்; மிக மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.