சூர்யா, கார்த்தியுடன் நடித்த பிரபல நடிகை ப்ரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனக்கும் தொழிலதிபர் நிதின் ராஜு விற்கும் பெங்களுருவில் திருமணம் நடைபெற்றதாக நடிகை ப்ரணிதா பதிவிட்டுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் இடையே நேற்று நடைபெற்ற இந்த  திருமணத்தில் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 






நடிகை ப்ரணிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் "மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் இதனை அறிவிக்கிறோம், 30 மே 2021 அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமண நாள் குறித்து உங்களிடம் தெரிவிக்காதது குறித்து நாங்கள் மிகுந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், தற்போது நிலவும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்திற்கு முதல் நாள் வரை தேதியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்தது. திருமண நாள் குறித்து தெளிவான முடிவெடுக்காமல் உங்களை குழப்ப விரும்பவில்லை. எங்களுடைய தாழ்மையான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் அனைவரும் எங்கள் திருமணத்தின்போது உடன் இருப்பதை விட எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது. நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள், நிலைமை சீரான பிறகு உங்களுடன் கொண்டாட நினைக்கிறோம். அன்புடன் ப்ரணிதா & நிதின்" என பதிவிட்டுள்ளார்.



கர்நாடக அரசு திருமணம் போன்ற நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.