கேரளாவில் வெற்றிபெற்ற சுரேஷ் கோபி


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிகழ்வுகளில் ஒன்று கேரளாவில் சுரேஷ் கோபியின் வெற்றி. பொதுவாக கேரள மாநிலத்தில் தேர்தல் என்றால் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் பலமான போட்டி நடைபெறும். ஆனால் இந்த முறை முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு திருச்சூர் தொகுதியில் ஒரு சீட்டை வென்றுள்ளது பாரதி ஜனதா கட்சி.


கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக பாஜக சார்பில் போட்டியிட்டு வருகிறார் நடிகர் சுரேஷ் கோபி . வழக்கமாக தனது தேர்தல் பிரச்சாரங்களில் தான் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று தன்னம்பிக்கையோடு பேசுவது போல் இந்த முறையும் பேசினார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்காது என்றே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் எல்லா கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கும்படி பிரச்சாரத்தில் சொன்னது போல் திருச்சூரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார் சுரேஷ் கோபி.


நடிகை நிமிஷா மீது சைபர் தாக்குதல்


சுரேஷ் கோபியின் வெற்றி கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பாஜகவுக்கு எதிராக பேசியவர்கள் மீது சமூக வலைதளங்களில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் சைபர் தாக்குதல்கல் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , சித்தா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை நிமிஷா சஜயன் மீது தற்போது சைபர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.






கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிராக இந்தியா முழுவதில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கேரள திரையுலக பிரபலங்களும் தங்கது எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள். இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் ஒன்றில் கலந்துகொண்ட நிமிஷா சஜயன் “கேரளாவில் திருச்சூரையே நாங்கள் தரவில்லை மொத்த இந்தியாவையும் பாஜகவிடம் கொடுத்துவிடுவோமா?” என்று திருச்சூரில் பாஜக தோல்வியை குறிப்பிட்டு பேசியிருந்தார்.


தற்போது சுரேஷ் கோபி திருச்சூரில் வெற்றிபெற்றுள்ளதைத் தொடர்ந்து நிமிஷா சஜயன் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள் பாஜக ஆதரவாளர்கள். நிமிஷா சஜயனுக்கு ஆதரவாக பிற நட்சத்திரங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்