ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை  நளினி, ஜோதிடத்தில் தனக்கு எப்படி நம்பிக்கை ஏற்பட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார். 


சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். சிறிய இடைவெளிக்குப் பின் இந்நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம்  “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. 


இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக நடிகை நளினி பங்கேற்றார்.  அப்போது பேசிய அவர், “கல்யாணம் பண்ணி ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பிறந்தால்  அப்பாவுக்கு நல்லது இல்லை என நிறைய ஜோதிடர்கள் சொன்னார்கள். குழந்தை வளர வளர அப்பாவின் வாழ்க்கையின் நிலைமை சரிவை நோக்கி தொடங்கும் என சொன்னார்கள். ராமராஜனும் ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதால் நிறைய ஜோதிடர்களை சென்று பார்த்தார். அப்போது, குழந்தையை சிவனுக்கு தத்துக் கொடுக்க சொன்னார்கள். நாங்களும் அவினாசிலிங்கம் கோவிலுக்கு சென்று குழந்தையை தத்துக் கொடுத்தோம். பின் 150 குடம் பால் அபிஷேகம் செய்து தவிடு கொடுத்து குழந்தையை திரும்ப பெற்றோம். 


ஜோதிடர் சொன்னது எல்லாமே செய்தோம். ஆனால் தலையெழுத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் நடந்தது. ஒருகட்டத்தில் ராமராஜனே  நான் வேண்டுமா இல்லை குழந்தைகள் வேண்டுமா என்று கேட்டார். நான் தனியாக இருந்தால் எல்லோரும் நல்லா இருப்போம். இல்லையென்றால் பையனை யாரிடமாவது வளர்க்க கொடுத்து விடுவோம் என சொன்னார். நான் நீங்க தனியா இருங்க என சொல்லி, என்னுடைய இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். இன்னைக்கு நாங்க நன்றாகவே இருக்கிறோம். 


மேலும் ஜோதிடத்தை நான் தப்பு சொல்லவில்லை. காரணம் என்னுடைய 13வது வயதில் சிரங்கு நோயால் அவதிப்பட்டேன். எவ்வளவு சிகிச்சை எடுத்தாலும் சரியாகாத நிலையில், என்னுடைய அம்மா பெரிய ஜோதிடர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவரோ என்னை பார்த்ததும் அம்மாவிடம், ‘உன்னுடைய மகள் ரோஜா பூ மாதிரி மலர போகிறாள். பிளைட்ல பறந்து பறந்து வேலை செய்வாள். ஜப்பான் கார் வாங்குவார்’ என சொன்னார். சொன்னபடி மாருதியே அறிமுகமாகாத நிலையில் முதன்முதலில் ஜப்பான் கார் வாங்கியது நான் தான். அதனால் ஜோதிடத்தை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. 


நான் ஓம் சக்தி என்ற படம் நடித்தேன். எனக்கு நடிக்கவே விருப்பம் இல்லாத நிலையில், அந்த ஷூட்டிங்கில் ராஜராஜ சோழன் என்ற நடிகர் இருந்தார். அவர் என்னுடைய ராசி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுக் கொண்டு, ‘நீ வேண்டாம் வேண்டாம் என சொன்னாலும் சினிமா சாப்பாடு தான். கல்யாணமே பண்ணினாலும் ஓடிவந்து விடுவாய். கே.ஆர்.விஜயா மாதிரி நிறைய சாமி வேஷம் போடுவாய் என சொன்னார். அதனை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை” என நடிகை நளினி கூறியுள்ளார்.