சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்த நடிகைகளில் ஒருவரான புவனேஸ்வரி 2005ம் ஆண்டு பாசமலர் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான சீரியல் வாய்ப்புகள் குவிந்தது. சினிமா பேக் கிரவுண்ட்டில் இருந்து வராவிட்டாலும் சித்தி, சந்திரலேகா உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். 


இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அது ஒரு சிறிய காட்சி தான் என்றாலும் பெரிய அளவில் அந்த காட்சி பேசப்பட்டது. அப்படத்தை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. பிஸியான ஒரு நடிகையாக வலம் வந்த புவனேஸ்வரி மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டது. அதிலும் குறிப்பாக விபச்சார வழக்கில் சிக்கிய பிறகு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. சர்ச்சைகளையும் புவனேஸ்வரியையும் பிரிக்க முடியாது எனும் அளவுக்கு பெரும் சிக்கலில் சிக்கி தவித்தார். 


 



இந்நிலையில் புவனேஸ்வரி பல ஆண்டுகளுக்கு முன்னர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. "நான் அனுபவித்த பிரச்சினைகளின் போது எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய குடும்பம் தான். என்னுடைய அம்மா தான் மிகவும் நொறுங்கிப்போய்விட்டார்.


குடும்ப வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. ஆனால் எனக்கு ஒரு மகன் இருக்கிறான். என்னுடைய அம்மாவின் ஆதரவை காட்டிலும் என்னுடைய மகன் எனக்கு கொடுத்த சப்போர்ட் மிகவும் அதிகம். அவனுடைய அம்மாவை பற்றின விமர்சனங்களை எதிர்கொள்ளும் போது அவன் எப்படி மனசு கஷ்டப்பட்டு இருப்பான் என்பதை நான் சொல்லி தெரிய தேவையில்லை. நானே சரிஞ்சு உட்காரும் போது கூட அவன் எனக்கு தைரியம் சொல்லுவான்.  


சினிமாவில் நான் நுழைவதற்கு முன்னர் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்தது இல்லை. எல்லா பிரச்சினையும் சினிமாவுக்கு வந்ததற்கு பிறகு தான் வந்தது. எனக்கு பத்து பன்னிரண்டு வயது இருக்கும் போது  என்னுடைய அப்பா எங்களை விட்டுட்டு போய் வேற கல்யாணம் செய்துகொண்டார். அவர் உயிருடன் தான் இருக்கிறார் ஆனால் எங்களுடன் இல்லை. அவர் இருந்திருந்தால் நிச்சயம் என்னை சினிமாவுக்குள் வர அனுமதித்து இருக்க மாட்டார். 


சினிமாவில் பெண்கள் அனைத்திற்கும் ஒத்துழைத்தால் தான் முன்னேற  முடியும் என்று எதுவும் இல்லை. நல்லபடியா திரையுலகத்தில் பயணிக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அதனால் ஒத்துழைத்தால் தான் முன்னேற முடியும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நான் சினிமா, சீரியலில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் இருந்தேன். அதனால் நான் வளர கூடாது என பலர் செய்த சர்ச்சைகளால் தான் பல சிக்கலில் சிக்கி தவித்தேன். 


தற்போது நான் ஆன்மீகத்தில் முழுமையாக இறங்கிவிட்டேன். நல்ல கதாபாத்திரம் கேரக்டர் ரோல் கிடைத்தால் நிச்சயம் நான் நடிப்பேன்" என கூறி இருந்தார் நடிகை புவனேஸ்வரி.