பாசத்திற்குரிய பாரதிராஜாவின் உன்னதமான படைப்புகளில் ஒன்று தான் அண்ணன் - தங்கையின் பாசத்தை போற்றிய 'கிழக்கு சீமையிலே'. திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது என்பது மலைப்பாக இருக்கிறது. அண்ணன் தங்கை பாசம் என்றாலே 'பாசமலர்' தான் என சிலாகிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் வரிசையில் இடம்பெற்ற ஒரு அற்புதமான படைப்பு 'கிழக்கு சீமையிலே'. 


 



90'ஸ் கிட்ஸ் ஃபேவரட் :


1993ம் ஆண்டு விஜயகுமார், ராதிகா சரத்குமார், நெப்போலியன், வடிவேலு, விக்னேஷ், அஸ்வினி என மிக பெரிய திரை பட்டாளத்தின் நடிப்பில் கிராமிய மண் வாசம் வீச மணக்க மணக்க வெளியான இப்படத்திற்கு வித்தியாசமான இசை மூலம் மெய்சிலிர்க்க வைத்து இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி இன்றைய தலைமுறையினரையும் முணுமுணுக்க வைக்கும் இனிமையான பாடல்களாக உள்ளன. பாக்ஸ் ஆபிசில் கலக்கிய இப்படம் வணீக ரீதியில்  மாபெரும் வெற்றி பெற்றது. 


பேச்சியம்மாவின் நெகிழ்ச்சி :


மாயாண்டியாக விஜயகுமாரும், விருமாயியாக ராதிகாவும், சிவனாண்டியாக நெப்போலியனும் வாழ்ந்த ஒரு திரைப்படம். மாறிமாறி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்து ஏகமனதாக பாராட்டுகளை குவித்தனர்.  இப்படத்தில் நடிகர் ராதிகாவின் மகளாக பேச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆர்.வி அஸ்வினி. கிழக்கு சீமையிலே படத்தின் 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதின் நினைவாக நடிகை அஸ்வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம்  தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். 


 



" நவம்பர் 12 ! இந்த ஐகானிக் திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் கதை சொல்லல் விதத்தால் சிறந்து விளங்கிய ஒரு திரைப்படம் இதை நான் அடிக்கடி உரக்க கூறியதில்லை. ஆனால் இயக்குநர் பாரதிராஜாவின் இந்த தலைசிறந்த படைப்பில் நானும் ஒரு பார்ட்டாக இருந்ததை நினைத்து நன்றியுள்ளவளாக உணர்கிறேன். மேலும் பல ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். 


ஏ.ஆர். ரஹ்மானின் வித்தியாசமான இசையால் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தினார். அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. 


'கிழக்கு சீமையிலே' படத்தில் எனக்கு அமைந்த மிக பெரிய பிளஸ் பாயின்ட்களில் ஒன்று 'ஆத்தங்கர மரமே' பாடல். 3 சதாப்தங்களையும் கடந்த பின்பும் இன்றும் இந்த பாடலை வைத்து நான் அடையாளம் காணப்பட்டு வாழ்த்துக்களை பெறுகிறேன்" என உணாச்சி மிகுதியில் அழகான ஒரு பதிவை போஸ்ட் செய்து இருந்தார் நடிகை அஸ்வினி.