பிரபல நடிகை அங்கிதா லோகாண்டா தனக்கு சினிமாத்துறையில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் பற்றி வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். 


சினிமாவில் தினம் தினம் வாய்ப்பு தேடி வருபவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களை சிலர் தவறான பாதைக்கு அழைத்து செல்வதும், அட்ஜஸ்ட் செய்ய சொல்வதுமான குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். மீ டூ அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு பல்வேறு நடிகைகளும் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் தொல்லை, தவறான வழிக்கு அழைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சினைகளும், குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு தீர்வு கிடையாதா? என பல பெண் பிரபலங்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இப்படியான நிலையில் பிரபல பாலிவுட் நடிகை அங்கிதா லோகாண்டா தனக்கு சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இவர் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலி ஆவார். 1984 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் டிசம்பர் 19 ஆம் தேதி அங்கிதா லோகாண்டா பிறந்தார். இவருக்கும் சுஷாந்த் சிங்கிற்கும் பவித்ர ரிஷ்டா என்ற தொடரில் நடித்தபோது காதல் மலர்ந்தது. 


2010 ஆம் ஆண்டு  முதல் காதலித்து வந்த இவர்கள் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்தனர். ஆனால் அதன்பின்னர் இருவரும் பிரிந்தனர். இதன்பின்னர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரை நினைத்து வருத்ததுடன் அங்கிதா பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் விக்கி ஜெயின் என்பவரை  திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். 


இதனிடையே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் பங்கேற்ற அங்கிதா லோகாண்டே 3வது இடத்தைப் பிடித்தார். இப்படியான நிலையில் சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் அங்கிதா, சில ஆண்டுகளுக்கு டிவி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் மும்பையில் வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்போது ஒரு படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளார். மேலும் ஒரு படத்தின் ஆடிஷனுக்கு சென்ற இடத்தில் தயாரிப்பாளர் தன்னை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார் என அங்கிதா தெரிவித்துள்ளார்.  


அந்த சமயம் எனக்கு 19 வயது தான் ஆகியிருந்தது. என்னிடம் இவ்வளவு கேவலமாக கேட்பார்கள் என நினைக்கவில்லை. நான் ஒருமாதிரி நிலைகுலைந்து விட்டேன். கூடுதலாக பணம் கிடைக்கும், சிறந்த நடிகையாக வலம் வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். உங்க தயாரிப்பாளருக்கு திறமையான நடிகையை விட, அட்ஜஸ்ட் செய்ய பெண் தான் வேண்டும் என்றால் என்னை விட்டு விடுமாறு சொல்லி கடுமையாக திட்டி விட்டு வந்ததாக அங்கிதா கூறியுள்ளார். இதன்பின்னர் சினிமாவே வேண்டாம் என முடிவு செய்து சீரியல்களில் நடித்ததாகவும் அவர் தெரிவித்துள்லார். இந்த விஷயம் பாலிவுட் திரையுலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.