சினிமாவில் தமிழ்நாட்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே இல்லை என யூட்யூப் பிரபலம் ரேகா தெரிவித்துள்ளார். 


கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தங்கவேலு கண்ணன் எடுத்த படம் “கண்டேன் உன்னை தந்துவிட்டேன் என்னை” என்ற படம் வெளியானது. இதில் ரேகா என்பவர் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் யூட்யூபில் பிராங்க் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானார். தற்போது ரேகா சினிமா நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். 


அதேசமயம் சினிமாவில் வாய்ப்புகளையும் தேடி வருகிறார். ரேகா தற்போது இயக்குநர் பாலா இயக்கியுள்ள வணங்கான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், சினிமாவில் தான் எதிர்கொண்ட கடினமான சூழல் பற்றி விவரித்துள்ளார்.


அதாவது, “சினிமாவில் வாய்ப்பு தேடும் போது பெண்கள் என்ற நிலையில் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்கிறார்கள். பெரும்பாலான இயக்குநர்கள் கேரளா, பெங்களூருவில் நல்ல உடல்வாகு கொண்ட பெண்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். இதனால் தமிழ்நாடு பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சீரியல்களில் கூட இதுதான் நிலைமையாக உள்ளது. சில பேர் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்லி என்னிடம் அணுகியுள்ளார்கள். எனக்கு அந்த நேரத்தில் எல்லாம் நம்மை எதாவது செய்து விடுவார்களோ என பயமாக இருக்கும். நான்  என்னுடைய அப்பா, நண்பர்களிடம் சொல்லி வருத்தப்படுவேன். எனக்குன்னு நிறைய திறமை இருக்கிறது. நான் பிராங் வீடியோ எல்லாம் பண்ணுவேன். அதைப் பார்த்து தான் இயக்குநர் பாலா அவரது ஆபீஸூக்கு என்னை நேரடியாக அழைத்து ஆடிஷன் கூட இல்லாமல் வாய்ப்பு கொடுத்தார். 


நான் பாலா படத்தில் நடிப்பதற்கு முன்னால் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளேன். “கண்டேன் உன்னை தந்தேன் என்னை” என்ற நான் நடித்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படம் வெளியான போது லவ் டுடே படம் வெளியானது.


என்னோட அப்பா என்னோட இந்த படம் பார்க்க வந்துவிட்டு இடைவேளையின்போது லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுடன் போய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.


அந்த படம் 5 நாட்கள் மட்டுமே ஓடியது. சினிமா என்பதை தாண்டி சின்ன சின்ன நடிகர்களுக்கு யூட்யூப் சேனல் தான் கைக்கொடுக்கிறது” என தெரிவித்துள்ளார்.