நடிகை தீபிகா படூகோன் கருவுற்றிருப்பதுபோல் நடிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு நடிகை ஆலியா பட் ஆதரவு தெரிவித்துள்ளார்.


தீபிகா படுகோன்


 முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படூகோன் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018-ஆம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம், தான் கருவுற்றிருக்கும் செய்தியை அறிவித்தார் தீபிகா. தீபிகா படுகோன் தற்போது பிரபாஸின் கல்கி 2898 படத்திலும் ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள சிங்கம் அகெயின் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தனது முதல் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க போதுமான ஓய்வு நேரத்தை ஒதுக்கி இருக்கிறார். இதனிடையில் அடுத்தடுத்து  பல்வேறு சர்ச்சைகள் அவரை சூழந்து வருகின்றன.


தீபிகா ரன்வீர் விவாகரத்து


தீபிகாவும் ரன்வீரும் தங்கள் திருமண உறவை முடித்துக்கொண்டு விவாகரத்து பெற இருப்பதாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தீபிகாவுடனான திருமண புகைப்படங்களை நீக்கியது இந்த சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இது தொடர்பாக எந்த விளக்கமும் தீபகா மற்றும் ரன்வீர் சார்பாக அளிக்கப்படவில்லை. இதற்கடுத்தபடியாக தற்போது தீபிகா படுகோன் கருவுற்றிருப்பதைப்போல் நடிப்பதாக நெட்டிசன்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கி உள்ளார்கள்


தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவித்த ஆலியா பட்


சமீபத்தில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் மக்களவைத் தேர்தலில் தங்கள் வாக்குகளை சேர்ந்து பதிவு செய்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவில் கருவுற்ற வயிற்றோடு தீபிகா காணப்பட்டார். இந்த வீடியோ நெட்டிசன்களின் கண்களில் படவே தீபிகா கருவுற்றிருப்பதுபோல் நடிப்பதாக அவர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து தீபிகாவுக்கு பிரபலங்கள் ஆதரவு குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.


பிரபல பத்திரிகையாளர் ஃபாயெ டி செளஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன்களை கடுமையாக திட்டி விமர்சித்திருந்தார். "தனது ஜனநாயக கடமையை ஆற்றவே தீபிகா பொது இடத்திற்கு வந்தார். அவரது உடலைப் பற்றியோ அவரது கர்ப்பத்தைப்  பற்றியோ கருத்து சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள்" என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். 


இந்த பதிவை பாலிவுட் நடிகை ஆலியா பட் லைக் செய்து தீபிகாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தீபிகாவின் முன்னாள் காதலனான ரன்பீர் கபூரை ஆலியா திருமணம் செய்துகொண்டுள்ளார். இதன் காரணத்தினால் இரு நடிகைகளையும் பொது இடங்களில் காண்பதோ , இருவரும் நேருக்கு நேர் உரையாடிக் கொள்வதோ மிகவும் அரிது.  தற்போது தீபிகாவின் மேல் எழுந்த முறையற்ற விமர்சனங்களை கண்டு அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் ஆலியா பட்.