கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 41


பன்முகக் கலைஞரின் மனைவி


கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் ராகவேந்திரா. கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் தொடங்கிய விஜய், தன் முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதினை வென்றவர்.


தொடர்ந்து பல படங்களில் நாயகன், குணச்சித்திர நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகக் கலைஞராக வலம் வந்துள்ள விஜய் ராகவேந்திரா, கடந்த 2007ஆம் ஆண்டு காவல் துணை ஆணையர் பி.கே.சிவம் என்பவரது மகள் ஸ்பந்தனாவை திருமணம்  செய்துகொண்டார். 


இவர்களுக்கு ஷவுர்யா எனும் மகன் உள்ளார். இந்நிலையில், இன்று ஸ்பந்தனா திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வந்துள்ளது.


பேங்காக்கில் மாரடைப்பு


முன்னதாக பேங்காக் சென்றிருந்த ஸ்பந்தனா நேற்று நெஞ்சு வலி காரணமாகஅங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி கன்னட சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பந்தனாவின் உடல் விரைவில் இந்தியா கொண்டுவரப்பட்டு அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது தமிழ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்கள்


நாதஸ்வரம்’ சீரியல் தொடங்கி பாரதி கண்ணம்மா வரை நடித்து தமிழ் சீரியல் உலகின் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் 30 வயதில் திடீர் மாரடைப்பால்  உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் இந்த தம்பதி ஆக்டிவ்வாக வலம் வந்து லைக்ஸ் அள்ளிய நிலையில், அரவிந்தின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கிய புனித் ராஜ்குமார்  தனது 46ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, கவலையில் ஆழ்த்தியது.


கன்னட சினிமாவில் தொடரும் சோகம்


மேலும் கன்னட சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா 2020ஆம் ஆண்டு தன் 39ஆவது வயதில் கடும் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தபோது அவரது மனைவி மேக்னா ராஜ் கருவுற்றிருந்தது கன்னட சினிமா தாண்டி பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தென்னிந்திய  சினிமாவில் இப்படி தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.