முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சமீப காலமாக நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பது. மக்கள் பணியாற்றுவது, விலையில்லா உணவகம் என்ற பெயரில் தினம்தோறும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்குவது, உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இது போக ரத்தம் தானம் செய்வது, கண் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.


வெற்றியை சுவைத்த விஜய் மக்கள் இயக்கம்


இதுபோக  ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர் மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் நிற்பதற்கு  ' விஜய் '  அனுமதி அளித்திருந்தார். அவ்வாறு தேர்தலில், போட்டியிட்ட ' விஜய் மக்கள் இயக்க ' நிர்வாகிகள் சிலர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயக்கத்தை, மேலும் கட்டமைக்க விஜய் முயற்சி செய்து கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வந்தார்‌. 


234 தொகுதிகளிலும் மாணவ மாணவிகள்


இந்த நிலையில் 10 மட்டும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களை பெற்ற, மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்ய நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். விஜய் பிறந்தநாளுக்கு முன்பு 10 மட்டும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரடியாக விஜய் சந்தித்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் நன்கொடைகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் அதற்கான பணிகளில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு 


இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய்  மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விஜய் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போக விஜய் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளையும் விஜய் அன்றைய தினம் சந்தித்து அவர்களையும் கௌரவப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரங்கத்திற்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு அங்கீகார அட்டைகள் வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் களத்தில் விஜய் தன்னை ஆக்டிவாக வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.