தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு ஸ்பெஷலான நடிகராக இருப்பவர் நடிகர் ஜெய். சென்னை 28, வடகறி, ராஜா ராணி, கோவா, நவீன சரஸ்வதி சபதம், கலகலப்பு 2 என பல திரைப்படங்களில் நடித்தவர்.


தற்போது சுந்தர். சி இயக்கத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் என ஒரு பெரிய திரைப்பட்டாளமே நடித்துள்ள காமெடி கலந்த முக்கோண காதல் திரைப்படம் "காஃபி வித் காதல்". இப்படம் நவம்பர் 7ம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து சமீபத்தில் நடிகர் ஜெய் அளித்துள்ள பேட்டியில் தனது திரை பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். 


 



பகவதி நினைவுகளை பகிர்ந்த ஜெய் :


2002ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான "பகவதி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பகவதி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக நடிகர் ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தார். " பகவதி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஓடிவிட்டது. மறக்க முடியாத பல மேஜிக்கல் மொமெண்ட்ஸ் உள்ளன. எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். எனக்கு சப்போர்ட்டாக இருந்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களுடைய அன்புக்கும் சப்போர்டிற்கும் மிக்க நன்றி" என பதிவிட்டுள்ளார். 


 






 


நடிகர் விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை :


'பகவதி' திரைப்படத்தில் நடிகர் விஜய் தம்பியாக நடித்திருந்தார் நடிகர் ஜெய். அது தான் அவரின் அறிமுக திரைப்படம். அந்த திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் விஜய்யுடன் பழகிய  அனுபவம் குறித்து கூறுகையில் "ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் போல் இல்லாமல் மிகவும் ஃப்ரெண்ட்லியாக பழகுவார். மீண்டும் அவருடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என விருப்பப்பட்டேன். அதை அவரிடம் தெரிவித்தும் உள்ளேன். இன்று அவர் ஒரு முன்னணி ஹீரோவாக இருக்கிறார். நீ உன்னுடைய படங்களில் லீட் ரோலில் ஹீரோவாக நடிப்பதில் கவனத்தை செலுத்து என கூறி மறுத்துவிட்டார் நடிகர் விஜய். இருப்பினும் ஒரு நாள் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் அவருடன் இணைந்து திரையை பகிர மிகவும் ஆசைப்படுகிறேன். அதற்கான தகுந்த நேரம் வரும் வரை காத்திருப்பேன்" என நடிகர் விஜய் ரசிகராக தனது ஆர்வத்தை தெரிவித்துக் கொண்டார் நடிகர் ஜெய்.