சினிமாவில் காமெடியால் கலக்கியது மட்டுமில்லாமல், எப்போதும் சோசியல் மீடியாவில் வலம் வரும் மீம்ஸின் ஹீரோவாக இருந்து வருகிறார் வடிவேலு. ஆனால் இவருடைய குடும்பத்தினர் யாருமே இதுவரை சினிமா வெளிச்சத்தைப் பார்த்ததே இல்லை.


 சினிமா பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகள் என்றாலே ஆட்டம், பாட்டம் மற்றும் ஆரவாரத்திற்குப் பஞ்சம் இருக்காது. சுப நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் சில நாள்களும், முடிந்தபிறகு சில நாள்கள் என சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். முக்கியமாக மீம்ஸுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் மீம்ஸ் என்றாலே தற்போது காமெடி நடிகர் வடிவேலு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் வடிவேலுவின் குடும்பத்தில் ஒருவர் கூட இதுவரை  பொதுவெளிக்கு வந்ததே இல்லை என்றால் நம்பவா முடிகிறது?



ஆம். மதுரையைச் சேர்ந்த வடிவேலு கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான ’என் தங்கை கல்யாணி’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 1991-ஆம் ஆண்டு வெளியாக என் ராசாவின் மனசிலே படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான இவர், “போடா போடா புண்ணாக்கு” என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானர். இதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் வலம் வந்த இவர், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.


குடும்ப வாழ்க்கை:


தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த வடிவேலு, கடந்த 1988-ஆம் ஆண்டு சரோஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் யாரும் இதுவரை யார் என்றே அனைவரும் தெரியாத நிலையில், வடிவேலு மகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து வடிவேலுவின் மகன் சுப்பிரமணியன் இவர்தான் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.



இதோடு சினிமா பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகள் என்றால், திரைத்துறையில் உள்ள பலரும் வருகை தருவார்கள். ஆனால் வடிவேலுவின் மகள்களின் திருமணம் அதற்கு எதிர்மறையாக நடந்தேறியுள்ளது. ஆம் வடிவேலுவின் மூத்த மகள் கன்னிகா, மற்றும் 2-வது மகள் கார்த்திகா மற்றும் கடைசி மகள் கலைவாணியின் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. வடிவேலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள்.  திருமண நிகழ்ச்சிகளில் கூட சினிமா வெளிச்சமே வடிவேலுவின் மகள்கள் மீது படவே விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எம்.பி.ஏ பட்டதாரியான 3-வது மகள் கலைவாணியின் திருமணமும் எளிய முறையில் படாடோபம் இல்லாமல் நடந்தேறியுள்ளது


என்ன செய்கிறார் வடிவேலு?



வடிவேலு நாயகனாக அரங்கேறிய இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தினைத்தொடர்ந்து, இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க இருந்தார். ஆனால் படப்பின் போது ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மோதலினால், வடிவேலு மீது  புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவிற்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டவுடன், மீண்டும் படத்தில் நடிக்கத்தொடங்கிவிட்டார் நடிகர் வடிவேலு.. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு, லண்டன் சூட்டிங்கிற்காகச் சென்றிருந்தார். தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வீட்டுத் தனிமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.