தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா, தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடியதாக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 






சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்களின் மூலம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்திருந்த சூர்யாவிற்கு ‘எதற்கு துணிந்தவன்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தனது மரியாதைக்குரிய இயக்குநரான பாலாவுடன் ‘ வணங்கான்’ படத்தில் இணைந்தார். படப்பிடிப்பில் சூர்யாவுக்கும்,  பாலாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை சூர்யா மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாவும், தானும் ஒன்றாக இருப்பது போட்டோவை பதிவிட்டு, தாங்கள் மீண்டும் படப்பிடிப்பில் இணைய இருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார். இதனிடையே இந்த படத்தில் பாலாவுடன் இயக்குநர் அருண் புருஷோத்தமன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியானது. 


 






இந்த நிலையில்தான் சூர்யா,  ‘சிறுத்தை சிவாவுடன்’ இணைய இருப்பதாக கூறி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெயரிடப்படாத இந்தப்படம் சூர்யா 42 என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. வரலாற்று பின்னணியில் உருவாவதாக சொல்லப்படும் இப்படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி  நடிக்கிறார்.


 






பல வருடங்களுக்குப் பின் சூர்யா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்தப்படம் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் இலங்கை நாட்டின் வனப்பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சுமார் 60 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.