26 Years of Suriya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா  சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயனின் வாரிசு


தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமார் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு திரை வாழ்க்கையிலும்,தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயல்பாடுகளை கொண்டவர். தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என கொண்டாடப்படும் 81 வயதிலும் தமிழ் சினிமா ரசிகர்களால் நினைவுக்கூரப்படுகிறார். இவரது மூத்த மகன் தான் சரவணன்.  அதான்பா.. நம்ம சூர்யா..!


முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த சூர்யா


சரவணனை சூர்யாவாக மாற்றியவர் இயக்குநர் வசந்த் தான். 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் தான் அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தார். ஆனால் அஜித்தை வைத்து வசந்த் இயக்கிய ஆசை படத்தில் முதலில் ஹீரோவாக அணுகப்பட்டவர் சூர்யா தான். அப்போது மறுத்த சூர்யா அதே வசந்த் இயக்கத்தில் அறிமுகமானது தான் காலத்தின் கணக்கு. 


தனது முதல் படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடித்த சூர்யா, மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க தயங்கியதே இல்லை. 2வது முறையாக விஜய் உடன் ப்ரண்ட்ஸ், விஜயகாந்துடன் பெரியண்ணா, விக்ரமுடன் பிதாமகன், ஆர்யாவுடன் காப்பான், மாதவன் மற்றும் சித்தார்த்துடன் ஆய்த எழுத்து, கமலுடன் விக்ரம்  ஆகிய படங்களில் பிற ஹீரோக்களுடன் நடித்திருப்பார். 


படங்களில் வித்தியாசம் காட்டியவர் 


ஆரம்ப காலக்கட்டத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘நந்தா’.  அநீதியைக் கண்டு பொங்கியெழும் முரட்டு இளைஞனாக அசத்திய அவரை கண்டு ரசிகர்களுக்கு ஒரு பயம் இருக்கும். இந்த படமே  சூர்யாவை தமிழ் சினிமா கொண்டாட அடித்தளமாக அமைந்தது. பிதாமகன், மௌனம் பேசியதே, காக்க காக்க, கஜினி, பேரழகன், ஆயுத எழுத்து, ஆறு, வாரணம் ஆயிரம், வேல் என படங்களுக்கு படம் தோற்றம் முதல் நடிப்பு வரை வித்தியாசம் காட்டியிருப்பார். 


இதையும் படிங்க: விலகிய அஜித்.. விஜய்யுடன் கைகோர்த்த சூர்யா.. ‘நேருக்கு நேர்’ ரிலீசாகி 26 வருஷமாச்சு..!


இப்படிப்பட்ட சூர்யாவுக்கு கடந்த 13 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது அயன், சிங்கம், சூரரைப் போற்று, ஜெய் பீம்  ஆகிய 4 படங்கள் தான். இந்த படங்களில் குறை சொல்லாத அளவுக்கு நடிப்பில் அசத்தியிருப்பார். அதேசமயம் மாற்றானில் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள், பேரழகனில் கூன் விழுந்த நபர், ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மர் என சூர்யா எப்போதும் ரசிகர்களால் கணிக்க முடியாத ஒருவராகவே உள்ளார்.  தற்போது 3டி தொழில் நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகும் கங்குவா படத்தில் அவர் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் உருவாகிறது. 


காதலர்களின் ரோல் மாடல் 


தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக சூர்யா - ஜோதிகா கொண்டாடப்படுகின்றனர். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தொடங்கி உயிரிலே கலந்தது, காக்க காக்க, ஜூன் ஆர், மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் என 6 படங்கள் ஒன்றாக நடித்தனர். இவர்களின் காதலும், அதன் வெற்றியும், ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் சூர்யா-ஜோதிகா இடையேயான நிகழ்வுகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவே இருக்கிறது. 


பிற துறைகளிலும் அசத்தும் சூர்யா


நடிப்பு மட்டுமல்லாது தயாரிப்பு, பாடகர் என பிற துறைகளிலும் சூர்யா அசத்தி வருகிறார். அகரம் பவுண்டேஷன் என்னும் அமைப்பை தொடங்கி ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் வாழ்வில் கல்வி என்னும் ஒளி விளக்கை ஏற்றி வருகிறார். தேசிய விருது, மாநில அரசு விருது என பல விருதுகளை வென்று தமிழ் சினிமாவில் நீக்கமற நிறைந்திருந்தாலும் மக்கள் மனதில் அவர் அடைந்த புகழுக்கு என்றும் அழிவில்லை என்பதே நிதர்சனம்..!