சூர்யா


 நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுமார் 350 கோடியில் இப்படம் உருவாகியுள்ளது. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறார் சூர்யா.


தமிழில் பல்வேறு படங்களை தயாரித்துள்ள அவரது 2D என்டர்டெயின்மெண்ட் படம் சமீபத்தில் இந்தியில் வெளியான சூரரைப்போற்று இந்தி ரீமேக் ஆக உருவான சர்ஃபிரா படத்தை தயாரித்திருந்தது. மேலும் தனது அகரம் அறக்கட்டளையின் வாயிலாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளையும் செய்து வருகிறார்


தற்போது நடிகர் சூர்யா பிரைவேட் ஜெட் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். Dassault Falcon 2000 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் மதிப்பு ரூ.120 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சூர்யா, தான் ஜெட் விமானம் வாங்கியதாக உறுதிப்படுத்தவில்லை


Dassault Falcon 2000 என்ன சிறப்பம்சங்கள்


திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களில் நடிகர் ஷாருக் கான் , அமிதாப் பச்சன் , பிரியங்கா சோப்ரா , அல்லு அர்ஜூன் , ராம் சரண் உள்ளிட்டவர்கள் சொகுசு விமானங்கள் வைத்துள்ளார்கள். தற்போது நடிகர் சூர்யா இந்த வரிசையில் இணைந்துள்ளார். சூர்யா வாங்கியுள்ள Dassault Falcon 2000 விமானத்தை இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரதன் டாடா வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. 


இந்த விமானம் 47 ஆயிரம் உயரம் வரை செல்லக்கூடியதும்  4000 நாட்டிக்கல் மைல்கள் செல்லக்கூடியது. இதில் படுக்கை வசதிகளுடன் கூடிய இருக்கைகள், வை ஃபை மற்றும் ஆடியோ வீடியோ வசதிகள் இடம்பெற்றுள்ளன. மும்பையில் தனது தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்தி வருவதால் மும்பைக்கு அடிக்கடி பயணம் செய்து வர சூர்யா இந்த விமானத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சூர்யா, தான் ஜெட் விமானம் வாங்கியதாக உறுதிப்படுத்தவில்லை


கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 44. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு நீலகிரியில் தற்போது நடைபெற்று வருகிறது. சில நாட்கள் முன்பாக படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டது. சில நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து சூர்யா மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளார்.