நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 42வது படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 






நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூர்யா சமீபத்தில் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினார்.  தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அவர் இந்தாண்டு ஹீரோவாக நடித்த எதற்கும் துணிந்தவன், கேமியோ ரோலில் நடித்த விக்ரம் ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ள அவர் அதற்கான காளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். இதேபோல் பாலாவின் வணங்கான் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். 


இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் சூர்யாவின் 42 படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவிற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறியுள்ள சிவா தான் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார். பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.






படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா 42வது படத்தின் மோஷன் போஸ்டர் நாளை (செப்டம்பர் 9) காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.