ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்த நாடக நடிகர் சுப்பிணி என்கிற சுப்பிரமணி அப்படத்தின் அனுபவங்கள் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 


கடந்த 1999 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்பா, சௌந்தர்யா, ரகுவரன், வடிவுக்கரசி, செந்தில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த படம் “அருணாச்சலம்”. தேவா இசையமைத்த இப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் ஒரு காட்சியில் நாடக நடிகர் சுப்பிணி என்கிற சுப்பிரமணி நடித்திருப்பார். 


காட்சிப்படி டிராக்டரில் இருக்கும் குழந்தைகளை கீழே இறக்கி வைக்கும் ரஜினி உயரம் குறைவாக இருக்கும் இவரை குழந்தை என இடுப்பில் தூக்கி இறக்கி வைப்பார். அப்போது ரஜினியை இவர் மிரட்டுவார். இந்த காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பலை எழும். இப்படியான சுப்பிணியை ரஜினியே அருணாச்சலம் படத்தில் நடிக்க வேண்டும் என சொல்லியுள்ளார் என்றால் நாடகத்துறையில் அவரின் அனுபவத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். 


ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர், “நான் 3, 4 வருஷத்துக்கு முன்னாடி டிவியில் அருணாச்சலம் பார்த்தேன். அது ஒரு சிறப்பான அனுபவம். கிரேஸி மோகன் என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தான். நான் ஆபீஸ் போய் கொண்டிருக்கும்போது போன் பண்ணி ரஜினி கூப்பிட்டாரு என சொன்னார். நான் என்னால் முடியாது என சொன்னேன். ஆனால் நீதான் நடிக்க வேண்டும் என்ற ரஜினி சொல்லி விட்டார் என கேட்டுக் கொண்டதால் கடைசியில் நான் நடித்தேன். 


ரஜினியும், சிவாஜியும் நான் நாடகத்தில் நடிக்கும்போது இருந்தே பழக்கம் இருந்தது. அவர்கள் என் நாடகத்தை வந்து பார்ப்பார்கள். அருணாச்சலம் படம் பார்க்க அழைத்திருந்தார்கள். என்னால் போக முடியவில்லை. நாடகத்துக்காக விருதுநகர், கோவில்பட்டிக்கு சென்ற போது படம் பார்த்தேன். இன்றைக்கும் வெளியே செல்லும்போது என்னை அடையாளம் கண்டுக் கொள்கிறார்கள். ரஜினி அழைத்ததால் எனக்கு அருணாச்சலம் படத்தில் நடிக்க பயமில்லாமல் இருந்தது. 


அந்த படத்தில் ரஜினியுடன் இரண்டு காட்சி இருக்கும். முதல் காட்சியில் நான் அவரை மிரட்டுவேன். இன்னொரு காட்சியில் அவர் என்னை பல்லி, தேள், பாம்பு எல்லாம் பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்து மிரட்டும்படி இருக்கும். அந்த காட்சி ரியாலிட்டியாக அமைந்தது. ஒரு படத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் உயரத்தை வைத்து அந்த காட்சி எடுக்க முயன்றார்கள். நான் நடிக்க முடியாது என வந்து விட்டேன். 


நீங்கள் எந்த படம் பண்ணுகிறீர்களோ, எந்த கேரக்டர் பண்ணுகிறீர்களோ அது ஓரளவுக்கு சம்பந்தப்பட்டவர்களை பாதிக்கும். அதனால் அப்படியே விலகிக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். இல்லாவிட்டால் நீங்க அப்படி நடிச்சீங்கன்னு கேக்கும்போது எனக்கு கேவலமாக இருக்கும்.  


நாடகத்தில் அதிகமுறை போட்ட நாடகம் என்றால் அது “ரகசியம் பரம ரகசியம்” தான். உலக நாடுகளிலும் இந்த நாடகம் போட்டிருக்கோம். 80களில் எல்லா நாடகம் போட்டால் உட்கார கூட இடம் இருக்காது. நான் காதலர் தினம் அன்று தான் பிறந்தேன். எங்க 2 பேருக்கும் என்னுடைய அம்மா தான்  ஆதாரமாக இருந்தார்கள். அவர் 1991 ஆம் ஆண்டு காலமானார். மரண படுக்கையில் இருக்கும்போது கூட எங்களை பற்றி தான் சிந்தித்தார். அந்த கடினமான சூழலில் இருந்து வெளியே வந்ததை மறக்க முடியாது. இருக்கும்போது ஆரோக்கியமாக இருந்தால் போதும் என்ற எண்ணம் தான் உள்ளது. மற்றபடி எதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளார்.