தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய பார்த்திபன் கனவு படம் பற்றி பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகரான அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அப்படம் அவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. தொடர்ந்து வர்ணஜாலம், பார்த்திபன் கனவு, போஸ், ஏப்ரல் மாதத்தில்,மனசெல்லாம்,கனா கண்டேன், ஒருநாள் ஒரு கனவு, பம்பரக் கண்ணாலே, பூ, உயிர், நண்பன் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஸ்ரீகாந்த் நடித்த சத்தமின்றி முத்தம் தா படம் வெளியானது. திறமை இருந்தும் அவருக்கு நிலையான ஒரு இடம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுவதுண்டு. 



இப்படியான நிலையில் 2003 ஆம் ஆண்டு கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன் கனவு படத்தில் ஸ்ரீகாந்த் நடித்தார். இந்த படத்தில் சினேகா இரட்டை வேடத்தில் நடித்தார். மேலும் விவேக், தேவதர்ஷினி, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். வித்யாசாகர் இசையமைத்த பார்த்திபன் கனவு படம் தமிழில் மிகச்சிறந்த இல்வாழ்க்கையை விளக்கும் படங்களில் ஒன்றாகும். இன்றைக்கும் பலரால் கொண்டாடப்படும் இப்படம் பற்றி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஸ்ரீகாந்த் தகவல் ஒன்றை கூறியிருந்தார். 






அதாவது, “பார்த்திபன் கனவு படத்தில் என்ன குறை இருக்கு என எனக்கு புரியவில்லை. நிறைய பேரு அந்த படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. சொல்லப்போனால் எல்லா ஹீரோவும் ரிஜக்ட் பண்ண படம் தான் பார்த்திபன் கனவு. இந்த படத்தை தயாரித்த சத்யஜோதி தியாகராஜன் சார் எனக்கு முன்னாடியே இந்த படத்தை ஓகே செய்து வைத்திருந்தார். ஆனால் அவருடைய சகோதரர் யாரோ ஒருவர் கரு.பழனியப்பனிடம் கதை கேட்டு விட்டு அதை அப்படியே புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். படமாக எடுத்தால் சரிவருமா என சந்தேகத்தோடு சொல்லி விட்டார்.


இதனால் கடுப்பான கரு.பழனியப்பன் காரில் இருந்து இறங்கி கோபத்தோடு சென்றுள்ளார். எனக்கு இந்த கதை வரும்போது நான் சத்யஜோதி தியாகராஜனிடம் நீங்கள் சொன்ன கதையை விட இது சிறப்பாக இருக்கிறது என சொல்லி விட்டேன்.அவரும் நான் இந்த கதையை கேட்டிருக்கிறேன், நல்ல கதை என சொல்லி விட்டார். அந்த கதை நன்றாகவே இருந்தது” என ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார்.




மேலும் படிக்க: Samantha Ruth Prabhu: “சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்தது சிறந்த முடிவு” - மனம் திறந்த நடிகை சமந்தா!