தான் ஒரு நடிகராக வேண்டும், அல்லது சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என கனவோடு பலரும் வாழ்ந்து வருவதுண்டு. அதற்கான  முயற்சியை விடாமல் பலர் எடுப்பதுண்டு. கிராமங்களில் வசிக்கும் பலர் சினிமா கனவோடு சென்னையை நோக்கி செல்வதும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் கிராமங்களிலிருந்து சென்று சாதித்தவர்களும் உள்ளனர். அந்த வரிசையில் தான் தான் ஒரு நடிகராகிவிட வேண்டும் என்ற கனவோடு பள்ளி படிப்பை விட்டு விட்டு சென்னைக்கு வந்தவர் சூரி. இவர் ஆரம்ப காலங்களில் மறுமலர்ச்சி, சங்கமம் உள்ளிட்ட படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் சூரி. அதன் பின்னர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் தான் தனது நகைச்சுவை மூலம் மக்களிடையே அறிமுகமாகி பேசப்பட்டார்.


அதில் உணவகம் ஒன்றில் 50 புரோட்டோ சாப்பிட்டால் 100 ரூபாய் வழங்கப்படும் சாப்பிட்ட புரோட்டாவுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை என போட்டி வைக்கப்பட்டு இருக்கும். அதில் 50 புரோட்டாக்களை சூரி சாப்பிட கடை ஊழியர் சூரியை ஏமாற்ற முயல்வார், ஆனால் சூரி இல்ல கள்ள ஆட்டம் ஆடுறீங்க..  நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன் என்று சொல்லுவார்.  இவரின் இந்த காமெடி ரசிகர்களை ஈர்த்ததோடு புரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.






அதன் பின்னர் பல  படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்ததோடு தனது நகைச்சுவை திறனால் மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.  இவரது பேச்சில் மதுரை மண் வாசம் இயல்பாகவே வீசும் என்பதால் பல கதைகளில் எளிதாக நடித்து தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நகைச்சுவை நடிகர்கள் என்றாலே கவுண்டமணி, செந்தில், வடிவேலு இவர்கள் தான் அனைவரின் நினைவுக்கும் வரும், அவர்களுக்கு பின் அந்த இடத்தை சூரி தனது நடிப்பு திறனால் வளர்த்துக் கொண்டவர். இப்படி பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்காக தனது உடலை அமைப்பை மாற்றி வருகிறார். சினிமாத்துறையை தாண்டி மதுரையில் தனது பிசினஸிலும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். மதுரையில் குறிப்பாக அம்மன் என்ற பெயரில் சைவ உணவகமும், அய்யன் என்ற பெயரில் அசைவ உணவகமும் நடத்தி வருகிறார். இதனை அவரது உறவினர்கள் கவனித்துக் கொள்ள தனது உணவகத்தின் சுவை மற்றும் தரத்தின் மூலம் மதுரை மக்களின் மனதிலும் பிரபலமானார் சூரி.





அம்மன் உணவகம் பல கிளைகளைக் கொண்ட  நிலையில் தற்போது மதுரை அரசு மருத்துவமனை கேன்டீனிலும் இந்த கிளை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இங்கு தயிர் சாதம், நெய் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் என அனைத்து வெரைட்டி ரைஸ்களும் குறைந்த விலையில் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் ஓரளவு பயன்பெறும் வகையில் வெரைட்டி ரைஸ்கள் 30 ரூபாய்க்கும், முழு சாப்பாடு 60 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

 

இந்த உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேள் தியாகராஜன் திறந்து வைத்தார்.  இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூரி கூறும் பொழுது, இந்த மருத்துவமனையில் உணவகம் திறக்க காரணமாக இருக்கும் அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்தார். தொடர்ந்து பேசும் பொழுது,  அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் அனைவரும்  ஏழை, எளியவர்கள் தான். எனவே நோயாளிகளும், ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஏற்ற விலையில் ருசியாகவும், தரமானதாகவும் கொடுப்போம்.

 

மக்களின் ஆதரவு பெற்ற அம்மன் கேன்டீன் தற்போது அரசு மருத்துவமனையிலும் துவங்கப்பட்டுள்ளது என்றால் வெறும் லாப நோக்கத்திற்காக மட்டுமின்றி தரத்திற்கும், ஏழை மக்களின் பசியாற்றவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.