தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆளுமை டி.ராஜேந்தர். இவரின் மூத்த மகன் சிலம்பரசன். இவருக்கு இன்று 42வது பிறந்தநாள் ஆகும். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிம்புவிற்கு பிறந்தநாள்:
டி.ராஜேந்தர் நடிப்பு, இசை, பாட்டு, இயக்கம் என எப்படி கெட்டிக்காரரோ, அதைவிட பன்மடங்கு கெட்டிக்காரர் சிம்பு. ரசிகர்களால் எஸ்.டி.ஆர். என்று அழைக்கப்படும் சிம்பு இன்று உச்சத்தில் இருந்தாலும், அவர் இருக்க வேண்டிய உச்சமானது இன்னும் அதிகம் என்பதே உண்மை. அவரது திரை வாழ்க்கையின் வளர்ச்சியை சிறுவயதில் இருந்து பார்த்த 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தமும், அவரின் தீவிர ரசிகர்களுக்கு இந்த வார்த்தையின் வலியும் புரியும்.
லிட்டில் சூப்பர்ஸ்டார்:
குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி அப்போதே லிட்டில் சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியுடன் உலா வந்த சிம்பு, முதன்முதலில் நாயகனாக 2022ம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகமாகிறார்.
துள்ளலான இளமை, பிரபுதேவாவிற்கு சவால் அளிக்கும் வகையில் நடனத்துடன் ஆர்ப்பரிக்கும் ஹீரோயிசத்துடன் தம், அலை, குத்து என அடுத்தடுத்து படங்கள் நடித்தார். இந்த படங்கள் மூலமாக சிம்புவிற்கு ரசிகர்கள் உருவாகினாலும், அவரது நடிப்பை சிலர் விமர்சனம் செய்தனர்.
ட்ரெண்ட் செட்டர்:
ஆனால், விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் ஹரி இயக்கிய கோயில் படத்தில் அமைதியான நடிப்பை வழங்கி அனைவரையும் பாராட்ட வைத்திருப்பார் சிம்பு. ஹரியின் திரை வாழ்வில் இன்றும் பாராட்ட வேண்டிய படங்களில் கோயில் முக்கிய படம் ஆகும்.
இந்த படத்திற்கு பிறகு மன்மதன் என்றொரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்து, 2004ம் ஆண்டிலே தமிழ் சினிமாவில் தனி ட்ரெண்டை உருவாக்கியவர் சிம்பு. படத்தின் திரைக்கதை, இயக்கத்தில் சிம்புவிற்கும் முக்கிய பங்கு இருந்தது. அந்தாண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமான இந்த படம் வந்தபோது சிம்புவிற்கு வெறும் 22 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தகன்:
பாடலாசிரியர், பாடகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் என அப்போதே சிம்பு கலக்கியிருப்பார். அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரவணா என்ற குடும்ப படத்தில் நடித்து தனது குடும்ப ரசிகர்களை உயர்த்திக் கொண்டார். தனது இளம் வயதிலே தொட்டி ஜெயா, காளை போன்ற படங்களில் கேங்ஸ்டர் கதாபாத்திரம் ஏற்று கலக்கியிருப்பார்.
விண்ணைத் தாண்டி வந்த சிம்பு:
சிறு வயதிலே தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலே நடித்துக் கொண்டிருந்த சிம்புவிற்குள் இருந்த நடிப்புத் திறமைக்கு முழு தீனி போட்டவர் கெளதம் வாசுதேவ் மேனன். அவரது எவர்கிரீன் மாஸ்டர் பீசான விண்ணைத் தாண்டி வருவாயா படம் சிம்புவை மொத்தமாக புதிய சிலம்பரசனாக தமிழ் ரசிகர்களுக்கு காட்டியது. ஆர்ப்பரிக்கும் வசனமோ, அனல் பறக்கும் சண்டைகளோ ஏதும் இல்லாமல் முழுக்க முழுக்க காதலுடன் பயணித்த ஒரு படத்தில் ஜெஸ்ஸியின் காதலன் கார்த்தியாகவே சிம்பு வாழ்ந்திருப்பார்.
சூர்யாவிற்கு எப்படி வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ரசிகர்கள் பட்டாளம் எகிறியதோ, அப்படி சிம்புவிற்கு இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் பட்டாளம் எகிறியது. ஆனால், அந்த மார்க்கெட்டை அவர் தக்கவைக்க அடுத்த சில ஆண்டுகள் தடுமாறினார். ஆனால், அவரது ரசிகர்களை அவர் தக்கவைக்காமல் இல்லை.
தொடர் தோல்வி, எடை அதிகரிப்பு:
அஜித்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் படம் வெளியாகாமல் இருந்தாலும், தொடர் தோல்விகள் இருந்தாலும் ஒருவருக்கு ரசிகர்கள் குறையாமல் இருப்பது சிம்புவிற்கு மட்டுமே ஆகும். ஏனென்றால், விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு நடித்த வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு படம் பெரிய வர்த்தக ரீதியிலான வெற்றியைப் பெறவில்லை.
இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு சிம்புவின் உடல் எடை அதிகரிக்க பலரும் கேலி செய்தனர். அவர் உடல் எடை அதிகரிப்புடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன் தோல்வி அடைந்ததுடன் பலரும் சிம்புவை கேலி செய்தனர். ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கிய சிம்புவை பலரும் கேலி செய்ததைப் பார்க்கையில் ரசிகர்களுக்கு வேதனையாக இருந்தது.
அசாத்திய கம்பேக்:
மறுபுறம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர் காதல் தோல்விகளும், அவரது பட தோல்விகளும் அவரது ரசிகர்களை துவள வைத்தது. ஆனால், சிம்பு துவண்டு போகவில்லை என்றே சொல்ல வேண்டும். உடல் எடை அதிகரித்த சிம்புவை பலரும் அவ்வளவுதான் சிம்புவின் கதை முடிந்துவிட்டது என்று கூறினார்.
ஆர்ப்பரிக்கும் பேச்சு என அனைத்தையும் விடுத்த சிம்பு ஆன்மீகத்தில் இறங்கினர். தனது உடலையும், மனதையும் கட்டுக்குள் கொண்டு வந்தார். யாருமே நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையை இளைத்து ஈஸ்வரன் படத்தில் பழைய சிம்புவாக காட்சி தந்தார். அந்த படம் தோல்வி அடைந்தாலும் சிம்புவின் கம்பேக் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.
வெற்றி மேல் வெற்றி:
அப்போதுதான், பாதியிலே நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்ட மாநாடு படம் ரிலீசானது. சிம்பு கேரியரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு அப்படி ஒரு வெற்றி. டைம் லூப்பில் சிக்கிக் கொள்ளும் திரைக்கதையில் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் படம் மாஸ் ஹிட். தலைவன் வந்துட்டான் என்று கொண்டாடிய அவரது ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக அமைந்தது வெந்து தணிந்தது காடு.
நாயகன் பட பாணியில் உருவான இந்த கேங்ஸ்டர் படத்தில் சிம்புவின் நடிப்பு, ஒரு நடிகனை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லையோ என்றே யோசிக்க வைத்தது. நெல்லை வழக்கு மொழியில் முதல் பாதியில் தனது உடல்மொழியாலும் நடிப்பாலும் மிரட்டியிருப்பார் சிம்பு. பத்து தல படம் அவரது மாஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக அமைந்தது. அந்த படத்தில் அவரது ஏஜிஆர் கெட்டப்பிற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.
அடுத்தடுத்து படங்கள்:
இப்போது கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்திலும், ராம்குமார் பாலகிருஷ்ணன் இ்யக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒவ்வொரு விழாவிலும் பங்கேற்கும் சிம்புவின் கெட்டப்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
42 வயதில் 25 வயது இளைஞனைப் போல அவர் துள்ளலாக மீண்டும் உலா வருவது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. சிம்புவின் கதை முடிந்துவிட்டது என்று கூறிய விமர்சகர்களுக்கும், ஹேட்டர்ஸ்களுக்கும் பதிலடி தரும் விதமாக அப்படி ஒரு மரண கம்பேக்கையும், மாஸ் ஹிட்களையும் சிம்பு தந்து வருகிறார். துவண்டு போகும் ஒவ்வொருவரும் கம்பேக் தருவது எப்படி? என்று சிம்புவிடம் கற்றுக்கொள்ளலாம். மேலும், படப்பிடிப்பிற்கு தாமதமாக வருகிறார் என்ற சிம்பு மீதான குற்றச்சாட்டும் தற்போது மாறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.