தமிழ்நாட்டின் கூடுதல் டிஜிபியாக பொறுப்பு வகிப்பவர் கல்பனா நாயக். கடந்தாண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இவரது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
பெண் டிஜிபியை கொலை முயற்சியா?
அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், தன் அறையில் ஏற்பட்ட தீ விபத்து தன்னை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம்? என்று கல்பனா நாயக் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலிலும், காவல்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
என்ன பதில் சொல்றீங்க ஸ்டாலின்?
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது. தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது. இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?
தி.மு.க. அரசுதான் பொறுப்பு:
தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?
இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, மு.க.ஸ்டாலின்தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பாதுகாப்பு வேண்டும்
ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ்.க்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியதால்தான் அவர் மீது இந்த கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருவது ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.